திங்கள், 8 செப்டம்பர், 2025

நீரின்றி அமையாது...........

         நீரின்றி அமையாது உலகு; நீரின்றி அமையாது உழவு; நீரின்றி அமையாது உணவு; நீரின்றி அமையாது உயிர். 


        இந்த பிரபஞ்சம் மட்டுமல்ல இந்த பிண்டம் என்கிற உடலும் பஞ்ச பூதத்தினால்தான் ஆனது என்று பல ஞானியரும் யோகியரும் கூறிச் சென்றுள்ளனர். 

        உலகம் மட்டுமல்ல இந்த உடம்பும் 70 சதவிகிதம் நீரால் நிறைந்திருக்கிறது. ஆனால் என்ன கற்றிருந்தும் "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவனின் வாசகத்தினை நாம் என்றும் பின்பற்றுவதில்லையே.

        நாம் இப்பொழுதும் இந்த புவியின் அமைப்பினைச் சற்றே கவனம் கொண்டு கண்டால் விண்ணிலிருந்து வீழும் மழைத்துளிகள் சங்கமமாகி மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவற்றோடு சங்கமமாகி ஓடை என மாறி  குட்டை குளம் ஏரி என தங்கி பின் சிற்றாறாகி பெரும் ஆற்றில் சங்கமித்து அது மற்றொன்றில் இணைந்து முடிவில் சாகரத்தில் சங்கமமாகிறது. மீண்டும் விண்ணோக்கி ஏகுகிறது மழைத்துளியாய் பிறப்பெடுக்க. இஃது இயற்கை அமைத்து வைத்த பாதை.


        ஓடைகளை, வாய்க்கால்களை  நிரவி நிலத்தோடு இணைத்து பட்டா வாங்கிக் கொள்கிறோம்.குளங்களை ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக மாற்றுகிறோம். வீடு கட்ட மணல் அள்ளி ஆற்றினை மலடாக்குகிறோம்.  சாகரத்தினை நீர் அடையும் வழியை அடைத்து இயற்கை சக்கரம் இயல்பாய் சுழலத் தடை ஏற்படுத்துகிறோம்.

        இதோடு விட்டோமா, வீதிதோறும் இயற்கையாய் அமைந்த அல்லது செய்வித்த மழைநீர் வடிகால்களை கழிவுநீர்க் கால்வாயாக மாற்றுவதோடு


குப்பை போடும் இடமாக மாற்றி விட்டோம். அனைத்து நீர் நிலைகளிலும் நாம் செயற்கையாய் உருவாக்கிய கழிவுகளால் நிரப்பி இருக்கிறோம். அப்படி இயற்கையை வஞ்சனை செய்வதற்கு நாம் கிஞ்சித்தும் வெட்கப்படுவதில்லை. 

        இதற்கு மேலும் தொழிற்சாலைகளை நிறுவி அதன் கழிவுகளை நீர்நிலைகளில் கலக்கிறோம். நீரின்றி அவதிப்பட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீரான புவியின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறோம். நீர் தீர்ந்தபிறகு சிறிது கூட நன்றியுணர்வு இல்லாமல் அதிலே சாயக்கழிவினை கலந்தோரும் இப்புவியில் உண்டு.

        இவற்றையெல்லாம் இறைவன் அறிய மாட்டானென்று சுற்றுச் சூழல் பாதுகாக்க வேண்டுமென்று பதாகை ஏந்துவோம்; பேரணி நடத்துவோம். வீதிமுழுதும், ஊர் முழுதும், நாடு முழுதும் என மரக்கன்றுகளை நடவு செய்வோம். நாளை அதற்கு நீரெப்படி என்ற எண்ணம் சிறிதும் இன்றி நம் வேலை பார்க்க நடையைக் கட்டுவோம். மீண்டும் ஓர்நாள் கூடி மரக்கன்றுகள் அழிந்து போன அதே இடத்தில் புதிய பதாகை புதிய சிறப்பு விருந்தினர் என புதிய மரக்கன்றுகளை நடவு செய்வோம்.

        நமது தொழிற்சாலைகளுக்காக, சாலை அமைக்க, கோவில் கட்ட என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி சாய்ப்போம். பசுமை வீடுகள், பசுமைச் சாலைகள் என அவற்றிற்கு பெயர்சூட்டி விழா எடுப்போம்.  கார்பன் ரேட்டிங்கிற்காக மரங்களை அழித்து ஒரு புறம் காற்றாலைகள், வேறொரு புறம் மரக்கன்றுகள் நடவு என வாழ்க்கை விழாக் கோலமாகத்தான் போகிறது. 

        மழைநீர் செல்லும் பாதையை அடைப்பது மட்டுமல்ல அதை ஈர்க்கும் மரங்களை அழிப்பது மட்டுமல்ல மழைத் துளிகள் வீழ்ந்து அருவியாகவும் ஆறாகவும் பெருக்க உதவும் மலைகளை வெட்டிக் கொள்ளை அடிப்பது மட்டுமல்ல அதன் வேரையும் வேரடி மண்ணையும் அல்லவா விற்றுப் பணமாக்குகிறோம்.

        நாளைய பிணங்கள் இன்றெரியும் பிணத்தை வேடிக்கை பார்க்கின்றன என்ற வாசகங்களைப் படித்து அந்த நொடி மெய்சிலிர்க்க மெய்ஞானம் விவாதித்து அகன்ற அந்நொடி முதல் பொருள்முதல்வாதத்தில் வீழ்ந்து திளைக்கிறோம் சாக்கடையும் புரளும் பன்றிகளைப் போல.

        இத்தனை பாதகங்களை பிரபஞ்சத்திற்கு செய்து வானம் பொய்த்துவிட்டது பருவம் தவறி மழை பொழிந்து பயிர்களை நாசமாக்கி விட்டது என்று இயற்கையின் மீது ஐபிசி சொல்லி குற்றப் பத்திரிக்கை எழுதுவதில் நமக்கு ஈடு இணை நாம் மட்டுமே.

        ஒரு தனி மனிதனுக்கோ, ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு ஊருக்கோ, ஒரு மாநிலத்திற்கோ அவர்கள் நீரினை எப்படி மதிக்கிறார்கள் என்பதனைப் பொறுத்தே அவர்களின் வாழ்க்கை அமையும். 

        இந்தத் தேசத்தின் பண்பாட்டில் சடங்குகளில் நீருக்கு மிக முக்கியத்துவம் உண்டு. ஒரு ஒப்பந்தப் பத்திரத்தைக் காட்டிலும் நீரை கைகளில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுப்பது என்பது மிக அதிக உத்திரவாதத்தினைக் கொண்டதாகக் கருதப்பட்ட தேசம் இது. 

        நதிகளைத் தாயாகக் கடவுளாகப் பார்த்து வந்த தேசம். இயற்கையை பஞ்ச பூதங்களைக் கடவுளாகப் போற்றிய தேசம். அவை மூட நம்பிக்கைகள் அல்ல. ஆனால் அப்படி மூடநம்பிக்கை என்று பேசப்பட்டதால் இன்றையத் தலைமுறை தனது பண்பாட்டின் ஒரு கூறின் நீட்சியை அதன் பெருமையை உணராமல் துண்டித்துக் கொண்டு இருக்கிறது. 

        பாற்கடல் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு, கங்கையைத் தலைமேல் கொண்ட ஈசன், காவிரி உற்பத்தியாகக் காரணமான கமண்டலம் கொண்ட  அகத்திய முனி, இந்திரனுக்கான பூஜையை மறுத்து குன்றேந்தி நின்ற கோவிந்தன், குன்றிருக்கும் இடம் எல்லாம் கோவில் கொண்ட குமரன் இவை போன்ற இன்னும் பலவும் பிரபஞ்சத்திற்கு அடிப்படையானபஞ்ச பூதத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் பாரதக் கலாசாரக் குறியீடுகள். 

       ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஸ்தல விருக்ஷம், ஒரு தீர்த்தம், தீர்த்த


யாத்திரை என்ற ஒரு வழக்கம் இது அத்தனையும் நமது பண்பாட்டில். ஆனால் இன்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் அடியோடு பெயர்த்தெறிந்து விட்டு அதனடியில் இருக்கும் பிள்ளையாருக்கு கோவில் கட்டும் மூடத்தனம். எந்த ஸ்தல விருக்ஷமும் பெரிய அளவில் பாதுகாக்கப்படுவதில்லை. கோவில் குளங்கள் வழிபாட்டில் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

        உணர வேண்டியது, பெருமைப்பட வேண்டியது, கட்டிக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. வாழ்வில் வளமில்லையா, தொழிலில் பிரச்சினையா, சமூகத்தில் பிரச்சினையா பரிகாரம் ஒன்றுதான் இயற்கைக்கு எந்த குந்தகமும் நமது செயல்களால், நமது தொழிலால் நேரக் கூடாது.

ஞாயிறு, 16 மார்ச், 2025

குடும்பம் எனும் கலைப்படைப்பு


 வீதியில் நடந்து செல்கையிலும் வாகனத்தில் கடக்கையிலும் இரண்டு கவுதாரிக் கோழிகள் இணையாக நடந்து செல்வதைக் கவனிப்பதுண்டு. முதலில் நம்மைக் கண்டதும் மிகுந்த வேகத்துடன் ஓடி ஒளிந்தவை இவன் சைவ உணவுக்காரன் என்றறிந்தனவோ என்னவோ வேக நடைக்கு தன்னை மாற்றிக் கொண்டன.

அடிக்கடி அவற்றைக் காண்பதால் சில நேரங்களில் வாகனத்தை நிறுத்தி அவற்றிடம் கேட்பதுண்டு. இரண்டு பேரும் எத்தனை நாள் ஜாலியாக சுற்றப் போகிறீர்கள். பொறுப்பு வேண்டாமா? குடுப்பத்தினைப் பெருக்க வேண்டாமா எனக் கேட்பதுண்டு.
சற்றே நின்று தலையைச் சாய்த்து பார்த்து விட்டு செடிகளின் உள் நுழைந்து கடந்து சென்று விடுவார்கள் இருவரும். பின்னர் வீட்டுத் தோட்டத்தில் இருவரும் உலா வருவதுண்டு. எட்டிப் பார்ப்பதும் மறைவதுமாகவும் தங்களது உணவினைத் தேடுவதுமாக இருப்பர்.
சில நாட்களுக்கு முன்னர்தான் வாகனத்தை எடுக்கையில் கவனித்தேன்; சாலையோரமாக இரண்டும் தங்களது குஞ்சுகள் சூழ நடைபோட்டுக் கொண்டு இருந்தன. உடனே மகளை அழைத்தேன். இங்கே பார் இவர்கள் குடும்பமாக வந்திருக்கிறார்கள் என்று. எனது குரலைக் கேட்டதும் இரண்டும் தங்களது குஞ்சுகளுக்கு முன்னும் பின்னுமாக நின்று கொண்டன எதிர்ப்புற காட்டின் வேலியோரத்தில். மகள் வந்து பார்த்த பின்பு அவை அங்கிருந்து நகரத் துவங்கிவிட்டன. கேட்டுகிட்டே இருந்தே குடும்பமா வந்துட்டாங்க என்றாள் மகள்.
இரண்டு நாள் கழித்து குடும்ப சகிதமாக தோட்டத்துக்கு வந்துவிட்டனர். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த நான் மகளிடம் சொல்ல இன்னும் அருகே பார்க்க மகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எவ்ளோ குட்டியாயிருக்கு என்று ஆச்சரியித்தாள். பேஷன் ஷோவில் நடை பயில்வது போல வரிசையாக தோட்டத்தில் உலா வந்தார்கள். ஒரு குடும்பத்தினைப் பார்க்கையில் மகிழ்வு ஏற்படுகிறதுதானே. மீண்டும் சில நாட்கள் கழித்து அவர்கள் உலா வருவதைக் கண்டு மகள் அலைபேசியில் எடுத்த காணொளியைத்தான் இணைத்துள்ளேன்.
குடும்பம் என்பது மிக அழகானது. அது ஒரு ஆகச் சிறந்த கலைப்படைப்பு போலத்தான். இன்று வெள்ளித் திரையிலும் சின்னத் திரையிலும் படைக்கப்படுவதைப் போல நிச்சயமாக நமது குடும்பங்கள் இருந்ததில்லை,. ஆனால் இன்று குடும்பம் என்றாலே இப்படித்தானோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் வண்ணம் பல குடும்பங்களும் இயக்குநர்கள் கட்டமைத்த புனைவுகளை தங்கள் வாழ்க்கையில் பொருத்து இந்த தேசத்தின் அழகிய கலைப் படைப்படைப்பினைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு; இந்த வரிகள் குடும்பத்துக்கு இல்லையா? கூட்டுக் குடும்பமாக இருந்த போது ஒருவரை ஒருவர் தாங்கித்தானே குடும்பம் வலுவாக சிதையாமல் தன் நிலையிலிருந்து மேலெழுந்து வந்தது. ஆனால் இன்று சிறு சிறு துண்டுகளாக தேங்காய் சில்லுகளைப் போல சிதறி இருக்கும் பொழுது அந்தக் கலைப் படைப்பைக் காண இயலாத ஏக்கம் பல பெரியவர்களின் மனங்களில் ஆறாத இரணமாக இருக்கக் கூடும். அதில் வடியும் சீழினைக் கூட அவர்களால் வெளிப்படுத்தி விட இயலாது. கூட்டுக் குடும்பத்தில் இல்லாதிருந்தவர்களின் மனதில் கூட இனம் புரியாத ஏக்கம் இருக்கக் கூடும்.
இன்னமும் காலம் கடந்து விடவில்லை அந்த அழகிய கலைப் படைப்பினை மீளுருவாக்கம் செய்வதற்கோ, இன்னும் கூடுதலாக மெறுகேற்றுவதற்கோ இந்தத் தலைமுறை முடிவெடுத்தால் அதனைச் சாதித்துக் காட்டி விட முடியும்.
அலுவலகத்தில், நாம் செல்லும் சாலையில், நாம் செல்லும் ஊர்களில் இனந்தெரியாத முகந்தெரியாத மனிதர்களிடம் நம்மால் இணக்கமாக நடந்து கொள்ள இயலுகிறது. ஜாதி மதம் கடந்து சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என எழுதப் பேச முடிகிறது. அதனை நமது இரத்த உறவுகளிடம் நடைமுறைப்படுத்துவதில் என்ன வெறுப்பு, வன்மம் என்றுதான் புரியவில்லை,
தனித்து தனித்து என்கையில் நான் நான் என்கையில் நாம் தனிமைப்பட்டு நிற்கிறோம். ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் உயர்த்தி விட்டால் அந்த மகிழ்வை அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகையில் அது பல்கிப் பெருகுமல்லவா?
இந்தத் தலைமுறை நினைத்தால் இனி தனித்து பிரிந்து வாழப்போவதில்லை என்று முடிவெடுத்தால் நிச்சயம் சாதிக்க இயலும். வேலை வாய்ப்புக்காக சகோதரர்கள் வெளியே சென்று வசிக்க வேண்டியது இருக்கிறதா; காலையில் இரை தேடிச் செல்லும் பறவை மீண்டும் கூடடவைதைப் போலே ஒரு கூட்டை மட்டும் வைத்துக் கொள்ளலாமே? நம் குழந்தைகளை பெற்றோரிடமே விட்டு வளர்க்கலாமே. வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ நமது கூடடைந்து கூடிக் களிக்கலாமே.
இன்று பல குழந்தைகளுக்கு அவர்களது நெருங்கிய உறவுகளே அறிமுகமில்லாமல் இருக்கிற ஒரு கொடுமையான காலமிது. பல பெற்றோரும் தங்களது உறவின் குடும்ப நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. அதற்கு எப்பொழுதும் சொல்லப்படும் பதில் அவனுக்கு ஸ்கூல் இருக்கு. ஸ்கூலில் அடிக்கடி லீவு போடக் கூடாது என்பார்கள். குழந்தை அங்கன்வாடிக்குச் செல்வதாக இருந்தாலும் கூட.
//** முதலில் ஒவ்வொரு பண்டிகையையும் சகோதரர்கள் அனைவரும் பெற்றோருடன் சேர்ந்துதான் கொண்டாட வேண்டும் தனியாக அல்ல என்றூ முடிவெடுக்க வேண்டும். சகோதரர்கள் இல்லை சகோதரிகள் மட்டுமே என்றால் அன்று சிறிது நேரமாவது உங்கள் கணவர் குழந்தைகளோடு அவரவரது பெற்றோருடன் கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம்.
பெற்றோர் இல்லையா மூத்த சகோதரருடன் பண்டிகையைக் கொண்டாடலாம். எப்படியோ எங்கு சாத்தியமோ அங்கு அத்தனை உறவுகளும் ஒன்று கூடி அது தீபாவளியோ பொங்கலோ அனைவரும் ஒன்று கூடி கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்துச் செயல் படுத்திப் பாருங்கள். நிச்சயம் மாற்றத்தினை உணர்வீர்கள். **//
//**அன்பு கொடுப்பதற்காக; அன்பளிக்கும் வள்ளலாக நம்மை மாற்றிக் கொள்ள முயல்வோம்**//
இது எதுவும் சாத்தியமற்ற ஒன்றல்ல. மனம் அதனை விரும்ப வேண்டும் அவ்வளவே. உறவுகள் கூடிப் பிணைந்து வாழ்வது அனைத்து வளத்தினையும் பல்கிப் பெருகச் செய்யும். பெற்றோர்கள் நமது குழந்தைகளை அக்கறையுடன் வளர்ப்பார்கள்.
நாம் நமது வேலை என்று ஓடுகையில் வயதான பெற்றோர்கள் குழந்தைகளின் பொறுப்பினை ஏற்கையில் அவர்களது தனிமை விரக்தி ஆகியன விலக்கப்படும். அவர்களை அது அவர்களது கடைசி காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். நமது வேலை பளுவில் நம்மால் அளிக்க இயலாத நேரத்தினை குழந்தைகளுக்கு அவர்கள் அளிக்கக்கூடும். குழந்தைகளும் மிகச் சரியான பாதையில் செல்ல உதவும். முதியோர்கள் ஆதரவற்று இருக்கும் நிலை ஏற்படாது.
தாய் தந்தை உறவுகளைப் பிரிந்து எங்கோ தொலை தேசத்தில் கிடைக்கும் வாழ்க்கைதான் வாழ்க்கை என்று ஏமாந்து போகிறார்கள் பலரும். பணம், சொத்து சுகம் வாழ்விற்குத் தேவைதான். ஆனால் அதுவே வாழ்க்கை அல்ல. எதையும் கவனிக்க அதிசயிக்க பெருமைப்பட வாழ்த்த நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை. . வாழ்க்கை என்பது ஒவ்வொரு நொடியினையும் அனுபவித்து ரசித்து வாழத்தான்.
இந்தக் கவுதாரிக் குடும்பம் கூடித் திரிவது போல கூடி பொருள் தேடி, கூடி உணவருந்தி, கூடி இறை தேடி நாடி, வாழ்கையில் வரும் இன்பம் கோடி கோடி. பொருளை மட்டுமல்ல வேலையை இன்ப துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள நம்மருகில் நமக்காக ஒரு கூட்டத்தை உருவாக்கி வைப்பதுதான் ஒரு ஆகச் சிறந்த கலைப் படைப்பாக இருக்கக்கூடும்.
நமது வீட்டிற்கு நமக்காக விளக்கேற்ற வந்த பெண்ணை தாங்கித் தூக்கி கொண்டாடி மகிழ்ந்தால்தானே நமது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். நம்மைப் பிரிந்து இன்னொரு குடும்பத்தினை தூக்கி நிறுத்தச் சென்றுள்ள நமது வீட்டுப் பெண்ணினை மறக்காமல் அவளையும் அவள் குடும்பத்தையும் வாஞ்சையோடு அணுகுவதுதானே சாலச் சிறந்தது. வாழச் சென்ற பெண்ணோ வாழ்விக்க வந்த பெண்ணோ இரண்டு பேரையும் ஒன்றென ஒவ்வொரு குடும்பமும் உணர்கையில் குடும்பம் என்கிற கலைப் படைப்பு மிளிரத்தானே செய்யும்.
வாழ்க்கை ஆகச் சிறந்த ஓவியம்; ஆகச் சிறந்த இசை; ஆகச் சிறந்த நாட்டியம்; ஆகச் சிறந்த நாடகம்; இன்னும் என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம். ஆனால் அதனை அப்படி ஆகச் சிறந்ததாகச் செய்யும் உறுதியுடன் உறவுகளுடன் கூடி நிற்கும் குடும்பத்தால் மட்டுமே சாத்தியம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இது வெற்று வார்த்தை அல்ல; வாழ்வியல் பாதை.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

பண்பாட்டு இழை

 கலாசாரம் - ஆச்சாரம் என்ற வார்த்தைக்கு ஒழுங்கமைவு,  ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம். சந்திரகலையைப் போல வளர்ந்தும் தேய்ந்தும் ஒரு நிலையை அடைவதால் இதனை கலாசாரம் என்றனரோ☺️☺️ 


பண்பாடு - அந்தாளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே என்று கிராமத்தில் பெண்கள் கூறுவார்கள். அதில்.வெறுப்பு இருக்காது ஆதங்கம் இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன். இங்கு பாடு என்பது அன்றாட வாழ்க்கை என்றாகிறது. பண்பட்ட ஒரு வாழ்க்கை; பண் என்றால் இசை எனலாம், இசை வளர்ந்து செம்மைத் தன்மையினை இன்று அடைந்துள்ளது போல செம்மைத் தன்மை பெற்ற வாழ்வியலை பண்பாடு எனலாம்தானே?


இப்படி பண்பட்ட கலாசாரம்.தொன்மை வாயந்ததாக ஒன்று இந்தப் புவியில் இருக்கும் எனில் அது இந்த பாரத மண்ணில் இருக்கும் கலாசாரம்தான். 


திருக்குறள் இரண்டாயிரம்.ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். இன்று.உலகினில் இருக்கும் இரு பெரும் மதங்கள் அன்று உருவாகவில்லை. திருக்குறளுக்கு முந்தியது சங்கப்பாடல்களும் அதற்கும் பழமையதாய் தொல்காப்பியம். தொல்காப்பியம் நமக்குக் கிடைக்காத அகத்தியம் குறித்தும் பேசுகிறது. 


இதோ இரும்புப் பயன்பாடு திராவிட(திராவிட தென்னிந்திய நிலப்பரப்பினைக் குறிக்கும் சொல்) நிலத்தில் 5000 வருடங்களுக்கு முந்தியே இருந்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் வெளிவந்து இருக்கிறது. அறிவின் வளர்ச்சி என்பது ஒன்று இல்லாமல் இந்நிலையை எட்டி  இருக்க இயலாது. 


இலக்கியமோ வாழ்வியலோ அறிவியலோ கல்லணை சுட்டும் நீர் மேலாண்மையோ அது எதுவாகினும் இந்த மண்ணில் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு உச்ச நிலையை எட்டி இருக்கிறது என்றால் அதன் துவக்கம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்?


இனியாவது ஆங்கிலேயன் வந்துதான் நம்மைப் படிக்க வைத்தான். நமக்கெல்லாம் அறிவுக்கண்ணைத் திறந்தான் என்ற ஒரு அடிமை மனப்பான்மையைப் புறந்தள்ள நமக்கு மனம் வருமா? 


இந்தப் பண்பாடு கலாசாரம் இதனை அப்படியே பிரதிபலிக்கும் அழகிய வார்த்தைகளைக் கொண்டது தமிழ் மொழி. உண்மையில் இன்று வழக்கில் இருக்கும் சமஸ்கிருதம் அன்று வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. அது அறிவுசார் பதிவுகளை இந்தத் தேசத்துக்காக பதிந்து வைக்கும் ஒரு.பொது மொழி என்ற தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தமது படைப்புகளை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்திருக்கக் கூடும். பிராகிருதம்தான் அதிகம் புழக்கத்தில் இருந்த மொழியாக இருக்க வேண்டும். நிறக. 


சங்ககாலத் தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக வாசனை புழக்கத்தில் வந்துவிட்டது. இன்று நாற்றம்.துர்நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முடவன் என்ற சொல் இன்று மாற்றுத் திறனாளி என மாறி நிற்கிறது. மொழியின் அழகு தேய்ந்து வருகிறது. 


சமீபத்தில் கூட கந்தசஷ்டி கவசத்தில் வரும் சேரிள முலைமார் இதில் முலை என்ற சொல் ஆபாசமாக இருப்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். உணமைதான் மக்கள் மனதில் இது ஆபாசம் என்பதாகப் பதிந்துவிட்டது. அதனை ஆங்கிலத்தில் ப்ரெஸ்ட் என்று சொல்வதுதான் சரி என்ற நிலைக்குத் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.


 இன்று பல வார்த்தைகளுக்குத் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்யும் பொழுது நமது மொழியினை அதன் வளத்தை அதன் பெருமைக்கு மாசு கற்பிக்கிறோமே என்ற குற்ற உணர்வு எவரிடமும்.தோன்றுவதாகத் தெரியவில்லை. மாறாகப் பெருமை கொள்ளும் நிலை உருவாகி நிற்கிறது. 


தொல்காப்பியம் சங்கப் பாடல்கள் என்று பேசுகிறோமே எத்துணை பேருக்கு இவை முழுமையாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலும்.ஒவ்வொருவுரும் முழுமையாக அறிந்திருக்க வேண்டியவை இவை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. நானும் அறிந்திலன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தயக்கமில்லை. வருத்தம் இருக்கிறது. 


நாம் நமது தாய்மொழி அதன் இலக்கிய வளப் பெருமையைப புறந்தள்ளி நல்ல தமிழ் வார்த்தைகளை பிறமொழி வார்த்தைகளில் இட்டு நிரப்புவோமானால் அங்கு நமது பெருமை கொண்ட பண்பாடு கலாசாரத்தின் பல்லாயிரக் கணக்கான ஆண்டாக கண்ணுக்குத் தெரியாமல் கட்டிக் காக்கின்ற நூலின் இழையும் அறுந்து.போகும். சிறிது சிறிதாக அறுந்து போக ஒரு நாள் மொத்த இழையும் அறுந்து.அடையாளம் அற்றவர்களாக நாம்.ஆகிப் போவோம். 


என்னதான் செய்ய வேண்டும். நமது மொழிவளத்தை நன்கு பயன்படுத்த வேண்டும். நாமும் நமக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நமது சந்ததிக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். பக்தி இலக்கியங்களோடு பழக.வேண்டும். 


நமது பண்பாட்டின் மீது பலமுனைத் தாக்குதல்கள் மேற்கத்திய சிந்தனைகள் வாயிலாக நிகழ்கிறது. அவை அவற்றைப் பெருமையாகவும் நம்மிடம் அது போன்ற எதுவுமில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. குறள் காட்டும் ஒழுக்கங்களை இந்த.காலத்திற்கு ஏற்றதல்ல என்று எள்ளி நகையாடி ஒதுக்க வைக்கின்றன. 


நம்மையும் நமது குழந்தைகளையும் குடும்பத்தினையும் தவறான வழியில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது பண்பாட்டை உண்மை வரலாற்றை அறிய முற்படுவதும் நமது சந்ததிக்கு அறிமுகப் படுத்துவதுமே.

வெள்ளி, 27 டிசம்பர், 2024

நற்குடும்பமே நல்ல சமூகத்திற்கு விதை

 ஆசிரியர்களை விட பெண்கள்தான் எதிர்கால சமூகத்துக்கு மிகப் பெரும் சொத்து. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நமது மரபில் கொண்டாடப்படும் வரிசை. ஒரு குழந்தையின் வாழ்வியல் சரியான பாதையில் செல்வதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுப்பவள் தாய்.

பின்னர் பிதா குரு என்பவர்களால் சரியாக வழிகாட்டப்பட்டு தெய்வத்தை உணர்ந்து கொள்கிறது ஒரு குழந்தை. அப்படி ஒருவரின் வாழ்வியலை உருவாக்கும் பெண், தாரம், மாமியார்,மருமகள் எனப் பல்வேறு பெயர் கொண்ட உறவு முறைகளில் ஒரு குடும்பத்தின் வாழ்வியலை கட்டிக் காத்து சரி செய்து அதன் ஒழுங்கமைவில் எந்தச் சிதைவும் ஏற்படாமல் கண்காணித்துப் பாதுகாக்கிறாள்.
இதனால்தான் பெண்ணைப் போற்றி வணங்கும் முறை இந்த மண்ணில் இருக்கிறது. மலையையும் நதியையும் தாயாய் வணங்குகிறோம், இந்த மண்ணினைத் தாயாய் வணங்குகிறோம். மலையிலும் நதியிலும் மண்ணிலும் அதன் தாய்மை குணத்தைக் கண்டு வணங்குகிறோம்.
ஆணின் பந்தாவான வீரப் பேச்செல்லாம் வெளியில் மட்டும்தான். ஒரு தாயிடமும் தாரத்திடமும் அவன் தன்னை தாழ்த்திக் கொள்கிறான். அதனைக் கேலிப் பொருளாக்கி சமூகத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கினாலும் அவர்களும் தாரத்தின் முன்னர் சரணென நின்றிருப்பவராகத்தான் இருப்பர். இதில் இழிவொன்றும் என்றும் இல்லை.
ஏனெனில் பெண்ணின் ஆதிக்கம் ஓங்கி நிற்பதும் அது வாஞ்சையாய் வணங்கி நிற்பதும் கொஞ்சிப் பேசுவது என எதை எடுத்துக் கொண்டாலும் அதன் நோக்கம் குடும்ப நலனும் நல்ல வாழ்வியலும் என்பதாக மட்டுமே இருக்கும்.
மனமொத்து மணந்த இருவரோ மனமொத்த குடும்பங்கள் இணைத்த இருவரோ இணைந்து உருவாக்கும் குடும்பங்கள் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். வாழ்வில் நிலைத்து நிற்பது பணம் என்பதனை முன்னிறுத்தி தொழில் வேலை பிறகு திருமணம் என்று வரும் இடங்களில் பெரும்பாலும் தனித்துவம், தனிமனித உரிமை, எனக்கானது என்று பேசுகிற இடத்தில் குடும்பம் வாழ்வியல் என்பன பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன.
வாழ்வியல் என்பதில் நமது அறத்திற்கு முன்னுரிமை இருக்க வேண்டும். அறம் சார்ந்த வாழ்வியல் என்பது நமது பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்த செயல்களாக இருக்கிறது. அந்த அறத்தில் தனி மனிதனை விட குடும்பம், உறவு, சமூகம் என ஒட்டு மொத்த மனிதனுக்கும் ஆண், பெண் பேதமற்று கிடைக்கும் உரிமையும் நலனுமன்றி தனிமனிதர் சார்ந்து மட்டுமான உரிமையும் நலனும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும்.
ஆனால் இன்றைய இளைய சந்ததிக்குப் போதிக்கப்படுவதெல்லாம் இந்த ஒட்டுமொத்த நலனை முன்னிறுத்துகிற பாரம்பரியம் மூட நம்பிக்கை, பழம் பஞ்சாங்கம், பட்டிக்காடு என்று சொல்லப்பட்டு அது ஏதோ இழிவான ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. மரபுகளைச் சிதைப்பதும், அழிப்பதும் மட்டுமே மூடநம்பிக்கை அற்றது முற்போக்கு சிந்தனை என்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது.
தன் நலத்தை மட்டுமே முன்னிறுத்துகிற ஒரு ஆணிடம் நீங்கள் பெண்ணின் பாதுகாப்பினை எப்படி எதிர்நோக்க இயலும். நான் விரும்புகிறேன் எனக்கு அது வேண்டும் அதனை எப்படியேனும் பெறவேண்டும் என்ற மூர்க்கத்தனம் ஊறி நிற்கிற ஒரு ஆண் சமூகத்துக்கு தீங்கானவன். எனக்குக் குடும்பத்தை விட எனது விருப்பம் மட்டுமே முதன்மையானது என்கிற பெண்ணால் குடும்பத்தின், சமூகத்தின் நலனை நினைத்து அதனை முன்னிறுத்திச் செயல்படும் குழந்தையை உருவாக்க இயலும்.
நமது சமூகம் பாதுகாப்பாகவும் மகிழ்வோடும் இருக்க வேண்டும் என்றால் அதன் மீது அக்கறை கொண்டவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நமது மண்ணின் அறம் சார்ந்து இயங்கக் கூடிய குடும்ப அமைப்பு முறை வலுப்பெற வேண்டும்.
காலத்திற்கேற்ப நமது குடும்ப அமைப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அதனைச் சிதைக்கிற முறையில் மேற்கத்திய கலாசார முறைகளை தமது குடும்பத்தில் செயல்படுத்துபவர்களும், அதனை ஆதரித்து எழுதுபவர்களும்தான் இன்றைய நவீன சமூக விரோதிகள் என்பதனை நாம் அடையாளம் காண வேண்டும்.
ஆணோ பெண்ணோ கோழையாய் இருப்பதால் என்ன பயன். ஒரு ஆணோ பெண்ணோ கோழையினை மணம் முடிப்பதால் என்ன பயன். ஆபத்து வருகையில் உடன் நின்று ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயலாத ஒரு ஆணைக் காதலிப்பதோ கரம் பிடிப்பதோ பெண்ணுக்கு ஏற்றதல்ல. அதற்காக முரடனையும் ரவுடியையும் தேடிப் பிடித்து மணம் புரிவது பிழையாகும். சினிமாவில் இப்படி முரடனையும் ரவுடியையும் பெண் விரும்பிக் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள். இது சிந்தனைத் திணிப்பு.
சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நமது பாரம்பரிய அறத்தை விட மேற்கத்திய சிந்தனைகளையும் அறத்திற்கு மாறான சுயநலச் செயல்களையும் சரி என்பது போலக் காட்டுகிறார்கள். பொது நலத்தை விட சுயநலமே சிறந்தது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அறமற்ற சிந்தனையை இந்த ஊடகம் நமது கலாசாரத்தை பண்பாட்டை குடும்ப அமைப்பினைச் சிதைப்பதற்காகச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணூக்கு ஆணை மதிக்கவும், ஒரு ஆணுக்குப் பெண்ணை மதிக்கவும் கற்றுத் தரவேண்டும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டு வேலைகளை இருபால் குழந்தைகளையும் செய்யச் சொல்ல வேண்டும். பெண்ணுக்கு உடல்நலமில்லாத நாட்களில் வீட்டு வேலையினை முழுவதுமாக அந்த வீட்டு ஆண்கள் பகிர்ந்து செய்ய வேண்டும். இந்த வேலை பகிர்வு எந்நாளும் இருக்க வேண்டும்.
நமது உறவின் விழாக்களுக்கும் அங்கு சென்று உறவுகளோடு மரியாதையோடும் அன்போடும் பழக அனைத்துச் சூழ்நிலைகளையும் சலிப்பில்லாமல் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிற ஒரு நிலையினை குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும்.
நமது வீட்டில் ஒவ்வொரு பண்டிகையையும், சடங்கு சம்பிரதாயங்களையும் சொல்லித் தந்து தவறாமல் கொண்டாட வேண்டும். இது மரபின் நீட்சி; மூடநம்பிக்கை அல்ல. மக்களின் இணைப்புக்கான நூல். அதனைச் சிதைக்கத்தான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்றெல்லாம் பல கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சிக்கித்தான் நமது பாரம்பரியத்தின் இணப்பும் மரபின் நீட்சியும் சிதைந்து வருகிறது. அது நமது தொன்மையையும் வரலாற்றையும் அழித்து விடும்.
அது போல சொந்த கிராமம் என்பது நாம் எங்கு சென்றாலும் அது நமது கருவறைத் தொடர்பு என்ற நினைவு இருக்க வேண்டும். நாம் பிறந்து வளர்ந்த ஊர், பூர்வீகம் அந்த ஊர் திடுவிழாக்கள் அதைத் தொலைத்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் அதன் அருமை அதிகமாகத் தெரியும்.
பூர்வீக கிராமத்தின் திருவிழாக்கள் அந்த ஊரின் ஒட்டு மொத்த சமூகத்தோடு நம்மை இணைக்கும் விழா. சமூக ஒற்றுமையை வலிமையாக்குபவை அவை. அவற்றைத் தவறவிடாமல் நமது குழந்தைகளோடு சென்று கொண்டாடுவது என்பது மிகுந்த அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும். பள்ளியில் இருக்கும் சிறு தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இதனைப் புறக்கணித்து குடும்பம் சமூகம் இவற்றின் பிணைப்பினை ஒற்றுமையினை நாம் நீர்த்துப் போகச் செய்யல் ஆகாது.
இவற்றை எதையும் நாம் செய்யாமல் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு குறை சொல்வதிலும் குற்றம் சுமத்துவதிலும் எந்த நியாயமும் இருக்காது.
நல்ல சமூகம் என்பது அங்கு பெண்கள் தேவதைகளாக தெய்வங்களாக மதிக்கப்படுவர். அவர்களுக்கு எந்த தீங்கும் நேராமல் ஆண்கள் பாதுகாப்பர். குடும்பங்களில் ஆண்கள் பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நடப்பர். ஒரு குடும்பத்தின் தலைமை என்பது என்றும் பெண் தான் என்ற புரிதல் இருக்கும். ஆணை அவள் முன்னிறுத்தினாலும் அவனை இயக்கும் நற்சக்தியாய் அவள் திகழ்வாள்.
நற்சமூகம் என்பது சக்தியின் கைகளில். சக்தி என்பது அனைத்து தெய்வங்களிலும் பேதமின்றி உறைந்து நிற்பது. நமது தேசத்துப் பெண்களின் உள்ளத்தில் முப்பெரும் தேவியரின் சக்தி நிறைந்து நிற்கட்டும். சூலம் வேல் என அவர்களின் கைகளில் அபரிமித ஆற்றலும் வீரமும் வெளிப்படட்டும். சக்தி கொண்ட சமூகத்தை அவர்கள் சமைத்தளிக்கட்டும். பெண்மையின் தாய்மை என்பது மென்மை மட்டுமல்ல; குலம் காக்கும் வன்மையும் கொண்டது.
ஓம் சக்தி பராசக்தி

வியாழன், 28 நவம்பர், 2024

 அமரன் - இந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அமரன் என்ற வார்த்தைக்கு  நிரந்தரமானவன் என்ற பொருள். ஒருவன் நிரந்தரமாக வாழ்வது சாத்தியமில்லை; ஆயின் தனது வாழ்வியலாலும் செய்யும் செயல்களாலும் அமரத்துவம் பெறுகிறான். முந்தைய திரைப்படத்தை விட இந்தத் திரைப்படத்திற்கு இந்தப் பெயர் மிகச் சரியாக பொருந்தி நிற்கிறது.




ஒரு பயங்கரவாதி மக்களை அழிக்கத் தன் உயிர் துறக்கிறான். ஒரு ராணுவ வீரன் தனது தேசத்தின் மக்களைக் காக்க உயிர் துறக்கிறான். 

ஒரு பயங்கரவாதி பல அப்பாவி மக்களைக் கொல்லும் தனது தீச்செயலைத்.தடுத்து நிறுத்தும் ராணுவ வீரனைக் கொல்கிறான். ஒரு ராணுவ வீரன் பல அப்பாவி உயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு பயங்கரவாதியின் உயிரை எடுக்கிறான்.

இதில் ராணுவ வீரனின் செயல்தான் புனிதமானது. ஆனால் புனிதத்திற்கும் மனிதத்திற்கும் ஆதி காரணமாக அமைந்த இந்தத் தேசத்தில்தான் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கும் அவர்களது இயக்கங்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது.

அமரன் திரைப்படம் தமிழகத்தில் மக்களின் மனதில் உறங்கிக் கிடக்கும் தேசிய உணர்வினை சிறிதளவு தட்டி எழுப்பி இருக்கிறது. அதனையே இங்குள்ள பிரிவினைவாதிகளால்.தாங்கிக் கொள்ள இயலவில்லை. உடனே இந்தத் திரைப்படத்தின் உண்மை நாயகனான முகுந்த் வரதராஜன் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

இதனை மதம் சார்ந்த அரசியலாக மாற்ற மதத்தினைச் சார்ந்து இயங்கும் அரசியலமைப்புகள் முயல்கின்றன. சமூக வலைத்தளங்களில் ஹிந்துக்கள் மதம் சார்ந்த வெறுப்புணர்வுடன் நடந்து கொள்வது போல ஒரு கட்டமைப்புடன் கற்பனைக் கதைகளை எழுதுகிறார்கள்.

திரைப்படம் பார்க்கும் வெறி கொண்டு அலைந்த நான் திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பவனாக மாறி இருக்கிறேன். இவ்வளவு விமர்சனங்களை பார்த்தபிறகு அமரன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது.

உடன் குடும்பத்துடன் சென்று பார்க்க இணையவழியில் திரைப்படம் பார்க்க முன்பதிவு செய்தேன். அநேகமாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்ததாகவே இருந்தது. அரங்கில் அப்படி ஒரு அமைதியை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. பயங்கரவாதத்தின் அழுத்தத்தை தமிழகம் அதிகளவு கண்டதில்லை. அந்நிய படையெடுப்புகளினால் நிகழ்ந்த தாக்கங்களும் தேசத்தின் பிறபகுதிகளை ஒப்பிடுகையில் தென்பகுதியில் குறைவு; அதிலும் தமிழகத்தில் இன்னும் சற்று குறைவு. அந்த அழுத்தம் பார்வையாளர்களிடம் அந்த அமைதியை உருவாக்கி இருந்தது.

கண்ணீர் விடாமல் அமரன் திரைப்படத்தை பார்த்தவர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்திருக்கும். அந்த அளவுக்கு அது.தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் குடும்பக் காட்சிகளில் மட்டும் ஒரு ஒட்டுதல்.இல்லை. ஒரு உண்மை இயக்குநரை பாதித்து அதனைக் காட்சியாக்குவது போல செயற்கையை காட்சியாக்குவது போலித்தனமாகவவும் கதையோட்டத்துடன் ஒட்டாததாகவும் மாறிவிடும்.

தலைவன் தலைவி காதலில் இருந்த ஒட்டுதல் குடும்பத்துடனான காட்சிகளில் அந்நியப்பட்டு நிற்கிறது. அதீத செயற்கைத்தனமாகவே அக்காட்சிகள் இருந்தன. கதாபாத்திரங்களின் நடிப்பும் வசனங்களும் கூட அவ்வாறே. அச்சமில்லை பாடலை முகுந்த் தனது குழந்தைக்கு சொல்லித் தரும் காட்சியும்,  இராணுவ வாகனத்தில் வீரர்கள் அந்தப் பாடலுக்கு காட்டும் உணர்வுகளும் அருமை அசத்தல்.

இதில் இன்னொரு தரப்பு விமர்சனமாக தலைவன் பிராமணர் என்பது மறைக்கப்பட்டது. அதற்கு இயக்குநர் கொடுத்த விளக்கம் நகைப்புக்குரியது. முகுந்தின் பெற்றோர் அவர் தன்னை பிராமணர் என்பதைவிட இந்தியனாக நினைப்பதிலையே பெருமை கொண்டிருந்தார் என்று சொல்லியதால் அவரை பிராமணராகக் காட்டவில்லை என்று.

இந்த இடத்தில் எனக்கு எழும் கேள்வி பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா அல்லது பிராமணர்கள் தவிர பிற ஜாதியார் தங்களை இந்தியர்களாக நினைப்பதில்லையா? என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் இந்த விளக்கத்தின் வாயிலாக.

முகுந்த் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வளவுதான். அவரது குடும்பமோ அல்லது அவரது மனைவியின் குடும்பமோ அதை விரும்பவில்லை என்பதாகக் காட்டுகிறார்கள். நாயகிக்கும் நாயகன் மீதான காதல் மட்டுமே காட்டப்படுகிறது. ராணுவம் என்பது நாயகனின் கனவு என்பதைத் தாண்டி அவருக்கு ராணுவத்தின் மீதாக எந்த ஈர்ப்பும் இருப்பது போல திரையில் காட்டப்படவில்லை.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல.என்பதாகத் தெரிகிறது. முகுந்தின் அம்மா ராணுவத்தில் மகன் சேருவதற்கு ஆதரவாகவே நின்றதாகச் சொல்லப்படுகிறது. உண்மைக் கதை என்று சொல்கிற பொழுது முழுவதுமாக உண்மைகளைச் சொல்ல என்ன தயக்கம் இருக்கிறது என்பது விளங்கவில்லை. தயாரிப்பாளர்களின் பின்னணி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தை அளித்திருக்கிறது. இயக்குநர் இதனைத் தவிர்த்திருக்கலாம்.

நடிப்பில் சாய்பல்லவி வாழ்ந்திருக்கிறார். அதுபோலவே ராணுவம் வரும் காட்சிகளிலும் நடிப்பும் திரைக்கதையும் அசத்துகின்றன. சிவகார்த்திகேயனும் நன்றாகவே செய்திருக்கிறார்.



இதில் தேசத்திற்கு ஆதரவாகச் செயல்படும் பொதுமக்களை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொல்வதைக் காட்டுகிறார்கள். அது உண்மைதான். அந்தப் பயத்தில்தான் பல பொதுமக்களும் தேசத்திற்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போலக் கூடுகிறார்கள்.

பொது மக்களில் ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைகள் மரணிப்பதில் விருப்பம் இருக்குமா என்ன? அதுவும் பயங்கரவாதிகள் தங்களது வாரிசுகளை வெளிநாடுகளில் நன்றாக வாழவைத்துக் கொண்டு அப்பாவி மக்களின் குழந்தைகளை பயங்கரவாதகச் செயல்களில் ஈடுபடுத்துவதை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அளவற்ற சகிப்புத் தன்மையுடன்; என்றாவது தங்களுக்கும் இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

தமிழகத்திலும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதையும் சக மனிதர்களுடன் வேறுபட்டு நிற்பதையும் அவர்கள் விரும்பவில்லை. இதனை நான் களத்தில் கண்டு இருக்கிறேன். ஆனால் சுயநலத்துடன் இயங்கும் இயக்கங்களின் முன்னால் அவர்கள்.கையறு நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. தங்களது குழந்தைகளுக்கு வெறுப்பைப் போதிக்கும் அவர்களைத் தடுக்க இயலாமல் வேதனையில் தவிக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

சில குறைகளைத் தாண்டி இந்தத் திரைபபடம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருப்பதிலும் இயக்குநரின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும். ராணுவம் தொடர்பான திரைப்படங்களில் விஜய்காந்த் அர்ஜூன் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தாலும் அவற்றில் வசனங்கள் மிகுந்திருக்கும். காட்சி அமைப்புகள் செயற்கைத் தன்மையுடனும் நம்பகத்தன்மை அற்றும் இருக்கும்.

ஆனால் அமரன் திரைப்படத்தில் பல காட்சிகளும் தத்ரூபமாகவும் இயல்பாகவும் நம்பும்படியாகவும் அமைத்ததற்கு இயக்குநருக்கு வாழ்த்துகள். உண்மையில் திரைத்துறையில் நீண்ட காலம் கழித்து தேசப்பற்றுடன் ஒரு திரைப்படம் வந்துள்ளது.

உண்மையில் பல சமூகச் சிதைவுக்கும் பிரச்சினைகளுக்கும் கலாசார சீரழிவிற்கும் தமிழக திரைததுறைதான் அடித்தளமாக இருக்கிறது. அந்த இடத்திலிருந்து இப்படி ஒரு திரைப்படம் வருவதே பெரிய விஷயம்தான்.

தமிகத்தில் இருப்பவர்கள் இனியாவது நல்ல திரைப்படத்திற்கு மட்டும் ஆதரவு தர வேண்டும். கலாசார சீர்கேட்டுக் கருத்துகளுடன் வரும் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அந்தப் பணத்தில் இல்லாதோர்க்கு உதவுங்கள். பணத்தை வீணடித்து வீணர்களை வாழவைக்க வேண்டாம்.

அமரன் திரைப்படம் தேவையான காலத்தில் வெளிவந்து தனது அமரத்துவத்தை அடைந்து இருக்கிறது என்பதால் பாராட்டும் வாழ்த்துகளும்.





எல்லை காக்கும் தெய்வங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.உங்களால்தான் நாங்கள் வாழக்கையினை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

சனி, 23 நவம்பர், 2024

நரக(கர)மயமாக்கல்

எனக்குப் பயணம் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் இயற்கையின் வெளிறிய வனப்பு இருக்கும் கிராமத்து சாலைகள் கூட இதமான ஒன்றாக இருக்கும் பரபரப்பான நகரத்து சாலைகளில் செல்வதைக் காட்டிலும்.

அப்படித்தான் ஒருநாள் செங்கல்பட்டிலிருந்து கேளம்பாக்கம் செல்ல திருப்போரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தேன். இந்தச் சாலை வனப்பகுதியைக் கடப்பதால் இருபுறமும் இயற்கை பச்சைநிறத் தோரணத்தை அமைத்து இருக்கும்.

இடதுபுறம் மாம்பாக்கம்  செல்லும் சாலை வர அந்தக் கிராமத்து சாலைகளை நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வனப்பகுதியில் மட்டும் மேடும் பள்ளமுமான சாலை. அதனைக் கடந்து கிராமத்து எல்லையை அடைந்ததும் சிறிய தார்ச்சாலையில் பயணம்.

இருபுறமும் நெற்வயல்கள். அந்த நெற்பயிர்கள் வேகமாக ஆடத்துவங்கின. அவை ஏதோ என்னிடம் கூற விழைவதைப் போல் இருக்க சற்று ஓரமாக நிறுத்திப் பார்த்தேன். இப்போது அவை எனது எதிர்திசைக்கு தலையைக் காட்டி மீண்டும் என்னை நோக்கி சாய்ந்தன. அவற்றின் தலை சென்ற திசையில் பார்த்தேன். தொலைதூரத்தில் கேளம்பாக்கத்தில் அமைந்த உயரமான கட்டிடங்கள்.

விவசாயியின் அறுவாள் அறுக்க வருகையில் கலங்காத இந்த நெற்பயிர்கள் இந்தக் கட்டிடங்களைப் பார்த்து நடுங்குகின்றன. விவசாயி அறுத்தாலும் தனது வம்சத்தை மீண்டும் மீண்டும் பெருகி தழைக்கச் செய்வான் என்பது அதற்குத் தெரியும் போல. ஆனால் இந்த கான்கிரீட் ராட்சசன் இரு கைகளையும் விரித்து பூமியையே விழுங்குவது போல வந்து கொண்டிருக்கிறான். அவன் நெருங்கி விட்டால் நெல் என்ன புல்லும் கூட முளைக்க இடம் தர மாட்டானே என்ற அச்சம் போல.


அச்சத்துடன் அவை வேகமாக மீண்டும் மீண்டும் சுழன்றாடின. வாடிய பயிரைக் கண்டு வாட நான் வள்ளலாரில்லையே. அவை பகிர்ந்த வருத்தத்தை என்னுள் வாங்கி நானும் வருந்தி மேலே வான் நோக்கி அவற்றிற்கும் எனக்கும் அறிவில் வித்தியாசம் வைத்தாய். ஆனால் என் இனம் அந்த பகுத்தறிவை கடவுள் மறுப்புக்கும் இன வெறுப்புக்கும் என்றாக்கி மற்றெதையும் சிந்திக்கக் கூட மறுத்து ஒதுங்கி நிற்கிறதே!! என்று இறையிடம் உனக்குக் கருணை மிகுதியாயிற்றே; ஏனிப்படி இதனை வேடிக்கைப் பார்க்கிறாய்; உனது கருணையை இவற்றின் மேல் காட்டக் கூடாதா என்றேன்

இறை மௌனமாய் இருந்தது எந்த பதிலுமளிக்காமல்; அது இயங்கியும் இயங்காமலும் நிலையாகவும் வினையினையும் விளைவினையும் வேடிக்கை பார்க்கும் ஒன்றல்லவா? எங்கோ பரவி விரவியுள்ள விவசாயிகள் விவசாயத்தின் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறார்.;விதைகளை சேகரிக்கிறார்;இயற்கையோடு உறவாடுகிறார்;பாரம்பரியத்தின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராவணன்கள்;இன்னொரு புறம் இயற்கையை பேணிக் காக்கும் ராமன்கள் என காலம் சுழன்று கொண்டு இருக்கிறது.

இன்னொரு நாள் வேலூரிலிருந்து சென்னை சாலையில் பயணித்துக் கொண்டு இருந்தேன். வாலாஜாபேட்டை சுங்கத்தை நெருங்குவதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள கிராமத்தில் ஒரு நெடிதுயர்ந்து நின்ற பாறை பாதியாக வெட்டப்பட்டு இருப்பதைக் கண்ணுற்றேன். அதிலிருந்து இரத்தம் போல் நீர் வடிந்து கொண்டு இருந்தது. இங்கிருந்து பார்க்கையில் கருரத்தம் மை பூசியது போல உறைந்து நிற்பதாக இருக்கும். மனது வலித்தது என்னுடைய இயலாமையை நினைத்து.

ஒரு விரல் புரட்சி என்பார்கள்; ஆனால் எனது ஒற்றை விரல் மட்டும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடும். அந்த கிராமத்தில் உள்ளவர்களும் என்னைப் போன்ற மனிதர்கள்தானே? அவர்களுக்கு இது வலிக்கவில்லையா? அல்லது தினமும் அந்த சாலையில் கட்ந்து போகும் ஆயிரக்கணக்கானவர்களும் என்னைப் போன்ற இயலாமையை கொண்டவர்களா? அதில் ஒருவர் கூட ஊடகவியலாளராக இருக்க மாட்டாரா? அறச் சீற்றத்தோடு போராடும் மனத்திண்மை கொண்டவர் எவரும் இருக்க மாட்டாரா? அவர்களுக்கெல்லாம் இந்த ஒற்றைவிரல் புரட்சி பற்றித் தெரியாதா?

அது போல இன்னொரு முறை திருச்சியிலிருந்து திருவையாறு செல்லும் சாலை அதிக வாகனங்கள் செல்லாத காவிரியின் இன்னொரு கரையில் பயணம். கரூர் திருச்சி சாலையில் நெஞ்சில் கனத்துடனும் பயத்துடனும் பயணித்த பல நாட்கள்; காரணம் மணல் ஏற்றி அசுர வேகத்துடன் செல்லும் லாரிகள். ஆனால் இந்தப் பயணத்தில் இந்தக் கிராமத்துச் சாலைகளிலும் மணல் வண்டிகள் பகலிலும் வரிசையாகச் சென்று கொண்டு இருந்தன. தஞ்சை மண்டலம் பாதுகாப்பு மண்டலம் என்று போராடியவர்கள் எவருக்கும் இந்த அளவற்ற மணல் அள்ளுதல் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லையா?

இதுபோல கனிமவளங்கள் கொள்ளை


போவது ஒரு புறமென்றால் நகரமயமாக்கல் என்று ஒவ்வொரு பேரூராட்சியும் பக்கத்தில் உள்ள கிராமங்களை விழுங்கி நகரமாகிறது; நகரம் மாநகரமாகிறது; அது மேலும் மேலும் அருகமை கிராமங்களை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

காந்தி கிராம ஸ்வராஜ்யம், ராம ராஜ்யம் குறித்துப் பேசினார். ஜே சி குமரப்பாவின் வழி காந்தி சொன்ன கிராம பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த அனைத்துக் கருத்துகளும் ஆள்பவர்களுக்குத் தெரியாது அல்லது அதைக் குறித்துக் கவலைப்படத் தயாராக இல்லை. இப்படி கிராமங்களை நகரமாக்கி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றி விட்டால் நகரத்தில் வாழும் மனிதனுக்கு உணவு எப்படித்தான் கிடைக்கும்?

ஒரு நகரத்தின் சுற்றளவு குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும்; அதனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட பரப்பளவிற்கு அந்த நகரத்திற்கு உணவளிக்க விளைநிலங்களும் கிராமங்களும் இருக்க வேண்டும். அவை என்றும் நகரமயமாக்கப்படாது என்ற உறுதியை ஆள்பவர்கள் ஏற்படுத்த வேண்டும்; அல்லது அவர்களை அதைச் சட்டமாக்க மக்கள் காந்திய வழியில்  போராட வேண்டும்.

கிராமங்கள்தான் இந்த தேசத்தின் உயிர்நாடி; மனிதர்களின் சுவாசக் குழாய், உணவுக் குழாய் எல்லாம். அவற்றின் இருப்பு மிக மிக அவசியம். இது சாத்தியப்பட வேண்டும் என்றால் கிராமங்களில் மக்கள் கட்சிகளைத் தாண்டி தங்களது கிராம நலனுக்காக இணைய வேண்டும். கிராமத்திலும், பேரூராட்சிகளிலும் கிராமத்தின் சார்பில் பேசக் கூடிய பிரதிநிதிகள் இருக்க வேண்டுமே அன்றி கட்சிகளின் விருப்பங்களை, ஆளும் வர்க்கத்தின் விருப்பங்களைச் செயல்படுத்தும் பிரதிநிதிகள் இருக்கக்கூடாது.

நேர்மையான, நியாயமான, கட்சி சார்பற்ற பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். குறிப்பாக இதுநாள் வரை பல பிழைகளுக்கு காரணமாகவும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற துணையாகவும் இருந்தவர்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். கிராமங்கள் இதனை முன்னெடுத்தால் அன்றி அவர்களுக்கு வேறு வழி இல்லை.


எனது பங்காக நான் என்ன செய்வது என்ற கேள்வி எழ, இதனைப் பதிவதும், பகிர்வதும் என்று தோன்ற இதோ பதிந்து விட்டேன். என்னைப் போன்று வருத்தப்பட்ட ஜீவன்கள் சிலர் இருக்கக்கூடும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம். அறம் வெல்லும் என்ற எண்ணம் மிகுந்திருக்க வேண்டுகின்றேன்.

தர்மம் தோற்பது [போல இருக்கும். இறுதியில் அதுவே வெல்லும். அறம் மறவற்க; அறமே துணை.

வியாழன், 31 அக்டோபர், 2024

ஆலய தர்மம்

 சனாதன தர்மம் சிறக்க ஆன்மீக வளமும் ஆத்ம பலமும் பெற


மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவை எந்த கலப்படமுமில்லாத தூய்மையானதாகத் தேர்வு செய்து ஆலயங்களில் பயன்படுத்த வேண்டும்.

ஆலயங்களில் அதிகளவு மின்விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து எண்ணெய் வித்துகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்களை கலப்படமின்றி பயன்படுத்தி தீபங்களை ஏற்ற வேண்டும்.  குறிப்பாக கர்ப்ப கிருஹங்களில் மின்விளக்கு பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

பூமாலை என்பது வாழைநாரில் கட்டப்பெற்று ஸ்வாமிக்கு அளிப்பதே உத்தமமானது. மற்றவை ஏற்றதல்ல.

ஆலயத்திற்கு பூஜைப் பொருள்களை எடுத்துச் செல்ல நெகிழிப் பைகளை பயன்படுத்துதல் கேடானது.

ஆலயம் என்பது வியாபாரத்தலமல்ல அங்கு நாம் எதனையும் விலை கொடுத்து வாங்குவது நமக்கு நன்மை அளிக்காது.

பிரசாதம் என்பது கர்ப்பகிருஹத்தில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்டவை, அணிவிக்கப்பட்ட பூ மாலைகள் விபூதி குங்குமம் தீர்த்தம் இவை மட்டுமே. பிரசாதம் என்பது விற்கப்படவும் கூடாது.

ஆலயங்கள் நமக்கு இறைசக்தியை அளித்து நமக்கு ஆத்மபலத்தை அளிக்கவே ஏற்பட்டவை. அங்கு நாம் அமைதியாக இருந்தால் மட்டுமே இறையனுபூதியை உணரவும் பெறவும் இயலும்.

எந்த இறைத்தலமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை பிரவாகிக்க குறிப்பிட்ட ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆகமத்திற்கு உட்படாத புதிய சந்நிதிகள், கட்டிடங்கள் இவை அந்த ஆற்றலை நாம் பெற இயலாமல் செய்துவிடும்.

ஆன்மீகம் என்பது இலகுவான ஒன்றல்ல. அதனை அடைய மனமும் உடலும் பக்குவப்பட வேண்டும். பக்தர்களுக்கு வசதிகள் என்ற பெயரில் செய்யப்படும் அனைத்தும் இதனை சிதைத்து விடும்.

மலைக் கோவில்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். விஞ்ச் ரோப்கார் இவை அனைத்துமே நமது ஆன்மீக பயணத்திற்கான தடைக்கற்கள்.

வசதிகள் ஆன்மீகத் தலங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விடுகின்றன. ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோர் இந்த வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

தல யாத்திரை ஒவ்வொரு மாதமும் நிழ்த்த வேண்டிய ஒன்றல்ல. எந்த மகானும் ஒரே கோவிலுக்கு மீண்டும் மீண்டும் சென்றதில்லை;உள்ளூர் கோவிலை புறக்கணித்ததுமில்லை. மாதா மாதம் நான் திருப்பதி சென்றுவிடுவேன் என்பது அகங்காரத்தை அளிக்குமே ஆன்றி அனுபூதியை அல்ல.

நாம் தினமும் செல்வது உள்ளூர் கோவிலாக இருக்கட்டும். அங்கு  ஆகமப்படி அனைத்தும் நடப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதைச் சரியாகச் செய்தால் ஆங்காங்கு பரவிக் கிடக்கும் பல இறைச் சக்திகளும் அருளும் கூட நமக்குக் கிட்டும்.

வருடத்தில் ஒரு முறை தலயாத்திரை மேற்கொள்ளலாம். சென்ற கோவிலுக்கே செல்லாமல் புதிய ஆலயங்களுக்குச் செல்வது சாலச் சிறந்தது.

பொருள்  வேண்டி பயணிப்பதும் இறைவனிடம் பேரம் பேசுவதும் பாவத்தைச் சேர்க்கும் செயலாகும். அருள் வேண்டியே ஆலயம் நோக்கிய பயணம் இருக்க வேண்டும்.

சபரிமலை போன்ற இடங்களுக்குச் செல்கையில் அதற்கான விரதத்தை முழுமையாகக் கடைபிடிக்காமல் செல்வது பயனற்றது என்பதோடு பாவத்தைச் சேர்க்கும். அந்த விரதத்தை அடுத்தவருக்கு சரியாக சொல்லாமல் விடுத்து அவரையும் தவறான பாதையில் பயணிக்கச் செய்வது கூடுதல் பாவத்தைச் சேர்க்கும். சபரிமலை யாத்திரை சுற்றுலா அல்ல என்ற எண்ணத்தோடு செயல்படுவது மட்டுமே அதற்கான பலனை அளிக்கும்.

ஆலயங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அங்கு அமர்ந்து உண்பது சரியல்ல. அங்கு குப்பைகளைப் போடுவது சத்தமாகப் பேசுவது இவை அனைத்தும் பாபத்தைச் சேர்க்கும் செயல். உண்பதே சரியல்ல என்கிற பொழுது அங்கு இயற்கை உபாதைகளைக் கழிப்பது எவ்வளவு தவறான செயல்.

ஆன்மீகம் இலகுவானது அல்ல. நெருப்பினைப் பயன்படுத்துவது போல. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பாதிப்பு நமக்குத்தான்.

உள்ளம் பெருங்கோவில்; ஊனுடம்பு ஆலயம் என்ற நிலையினைப் பெற ஆலய யாத்திரை கவனத்துடனும் கூடுதல் அக்கறையுடனும் ஆன்மீக நாட்டத்தோடு செய்யப்பட வேண்டும்.

விரைவு தரிசனம் பெற காசு கொடுத்துப் போவதும் சிறப்புக் கட்டணங்களில் தரிசனம் பெறுவதும் ஆலயத்தின் நேர்மறை சக்திகளை நாம் பெறுவதைத் தடுத்துவிடும். அதனைத் தவிர்த்துவிடுவது சாலச் சிறந்தது.

இறை தரிசனத்திற்காக நாம ஜபத்துடன் காத்திருப்பது நமது ஆன்மீகத்தை உயர்த்தும் செயலாக அமையும். ஆத்ம பலத்தைப் பெருக்கும்.

தல யாத்திரைகளில் அதிக ஆலயங்களுக்குத் திட்டமிடுதலைத் தவிர்க்கலாம். தல யாத்திரையாக ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அங்கு முழுநாளும் இருத்தல் சிறப்பு.

ஆன்மீக விதிகளைச் சரியாகவும் முறையாகவும் பக்தர்களுக்குச் சொல்லி அவற்றைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் இவர்களுக்கு உண்டு. ஆகமப்படி அனைத்தையும் ஆலயத்தில் நிகழ்த்த வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு. இவற்றிலிருந்து இவர்கள் விலகினால் கூடுதலான பாபத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்.

ஒரு ஆலயத்தில் ஆகம மீறல் நடக்கிறது என்றால் அந்தக் கோவில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் அறங்காவலர்கள் அந்தக் கோவிலைச் சார்ந்த மடாதிபதிகள் ஜீயர்கள் உள்ளூர் மக்கள் என அனைவருக்கும் அவரவருக்கு விதித்தபடி பாபம் சேரும் என்பது சத்தியமான ஒன்று.