வியாழன், 28 நவம்பர், 2024

 அமரன் - இந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அமரன் என்ற வார்த்தைக்கு  நிரந்தரமானவன் என்ற பொருள். ஒருவன் நிரந்தரமாக வாழ்வது சாத்தியமில்லை; ஆயின் தனது வாழ்வியலாலும் செய்யும் செயல்களாலும் அமரத்துவம் பெறுகிறான். முந்தைய திரைப்படத்தை விட இந்தத் திரைப்படத்திற்கு இந்தப் பெயர் மிகச் சரியாக பொருந்தி நிற்கிறது.




ஒரு பயங்கரவாதி மக்களை அழிக்கத் தன் உயிர் துறக்கிறான். ஒரு ராணுவ வீரன் தனது தேசத்தின் மக்களைக் காக்க உயிர் துறக்கிறான். 

ஒரு பயங்கரவாதி பல அப்பாவி மக்களைக் கொல்லும் தனது தீச்செயலைத்.தடுத்து நிறுத்தும் ராணுவ வீரனைக் கொல்கிறான். ஒரு ராணுவ வீரன் பல அப்பாவி உயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு பயங்கரவாதியின் உயிரை எடுக்கிறான்.

இதில் ராணுவ வீரனின் செயல்தான் புனிதமானது. ஆனால் புனிதத்திற்கும் மனிதத்திற்கும் ஆதி காரணமாக அமைந்த இந்தத் தேசத்தில்தான் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கும் அவர்களது இயக்கங்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது.

அமரன் திரைப்படம் தமிழகத்தில் மக்களின் மனதில் உறங்கிக் கிடக்கும் தேசிய உணர்வினை சிறிதளவு தட்டி எழுப்பி இருக்கிறது. அதனையே இங்குள்ள பிரிவினைவாதிகளால்.தாங்கிக் கொள்ள இயலவில்லை. உடனே இந்தத் திரைப்படத்தின் உண்மை நாயகனான முகுந்த் வரதராஜன் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

இதனை மதம் சார்ந்த அரசியலாக மாற்ற மதத்தினைச் சார்ந்து இயங்கும் அரசியலமைப்புகள் முயல்கின்றன. சமூக வலைத்தளங்களில் ஹிந்துக்கள் மதம் சார்ந்த வெறுப்புணர்வுடன் நடந்து கொள்வது போல ஒரு கட்டமைப்புடன் கற்பனைக் கதைகளை எழுதுகிறார்கள்.

திரைப்படம் பார்க்கும் வெறி கொண்டு அலைந்த நான் திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பவனாக மாறி இருக்கிறேன். இவ்வளவு விமர்சனங்களை பார்த்தபிறகு அமரன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது.

உடன் குடும்பத்துடன் சென்று பார்க்க இணையவழியில் திரைப்படம் பார்க்க முன்பதிவு செய்தேன். அநேகமாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்ததாகவே இருந்தது. அரங்கில் அப்படி ஒரு அமைதியை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. பயங்கரவாதத்தின் அழுத்தத்தை தமிழகம் அதிகளவு கண்டதில்லை. அந்நிய படையெடுப்புகளினால் நிகழ்ந்த தாக்கங்களும் தேசத்தின் பிறபகுதிகளை ஒப்பிடுகையில் தென்பகுதியில் குறைவு; அதிலும் தமிழகத்தில் இன்னும் சற்று குறைவு. அந்த அழுத்தம் பார்வையாளர்களிடம் அந்த அமைதியை உருவாக்கி இருந்தது.

கண்ணீர் விடாமல் அமரன் திரைப்படத்தை பார்த்தவர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்திருக்கும். அந்த அளவுக்கு அது.தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் குடும்பக் காட்சிகளில் மட்டும் ஒரு ஒட்டுதல்.இல்லை. ஒரு உண்மை இயக்குநரை பாதித்து அதனைக் காட்சியாக்குவது போல செயற்கையை காட்சியாக்குவது போலித்தனமாகவவும் கதையோட்டத்துடன் ஒட்டாததாகவும் மாறிவிடும்.

தலைவன் தலைவி காதலில் இருந்த ஒட்டுதல் குடும்பத்துடனான காட்சிகளில் அந்நியப்பட்டு நிற்கிறது. அதீத செயற்கைத்தனமாகவே அக்காட்சிகள் இருந்தன. கதாபாத்திரங்களின் நடிப்பும் வசனங்களும் கூட அவ்வாறே. அச்சமில்லை பாடலை முகுந்த் தனது குழந்தைக்கு சொல்லித் தரும் காட்சியும்,  இராணுவ வாகனத்தில் வீரர்கள் அந்தப் பாடலுக்கு காட்டும் உணர்வுகளும் அருமை அசத்தல்.

இதில் இன்னொரு தரப்பு விமர்சனமாக தலைவன் பிராமணர் என்பது மறைக்கப்பட்டது. அதற்கு இயக்குநர் கொடுத்த விளக்கம் நகைப்புக்குரியது. முகுந்தின் பெற்றோர் அவர் தன்னை பிராமணர் என்பதைவிட இந்தியனாக நினைப்பதிலையே பெருமை கொண்டிருந்தார் என்று சொல்லியதால் அவரை பிராமணராகக் காட்டவில்லை என்று.

இந்த இடத்தில் எனக்கு எழும் கேள்வி பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா அல்லது பிராமணர்கள் தவிர பிற ஜாதியார் தங்களை இந்தியர்களாக நினைப்பதில்லையா? என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் இந்த விளக்கத்தின் வாயிலாக.

முகுந்த் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வளவுதான். அவரது குடும்பமோ அல்லது அவரது மனைவியின் குடும்பமோ அதை விரும்பவில்லை என்பதாகக் காட்டுகிறார்கள். நாயகிக்கும் நாயகன் மீதான காதல் மட்டுமே காட்டப்படுகிறது. ராணுவம் என்பது நாயகனின் கனவு என்பதைத் தாண்டி அவருக்கு ராணுவத்தின் மீதாக எந்த ஈர்ப்பும் இருப்பது போல திரையில் காட்டப்படவில்லை.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல.என்பதாகத் தெரிகிறது. முகுந்தின் அம்மா ராணுவத்தில் மகன் சேருவதற்கு ஆதரவாகவே நின்றதாகச் சொல்லப்படுகிறது. உண்மைக் கதை என்று சொல்கிற பொழுது முழுவதுமாக உண்மைகளைச் சொல்ல என்ன தயக்கம் இருக்கிறது என்பது விளங்கவில்லை. தயாரிப்பாளர்களின் பின்னணி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தை அளித்திருக்கிறது. இயக்குநர் இதனைத் தவிர்த்திருக்கலாம்.

நடிப்பில் சாய்பல்லவி வாழ்ந்திருக்கிறார். அதுபோலவே ராணுவம் வரும் காட்சிகளிலும் நடிப்பும் திரைக்கதையும் அசத்துகின்றன. சிவகார்த்திகேயனும் நன்றாகவே செய்திருக்கிறார்.



இதில் தேசத்திற்கு ஆதரவாகச் செயல்படும் பொதுமக்களை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொல்வதைக் காட்டுகிறார்கள். அது உண்மைதான். அந்தப் பயத்தில்தான் பல பொதுமக்களும் தேசத்திற்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போலக் கூடுகிறார்கள்.

பொது மக்களில் ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைகள் மரணிப்பதில் விருப்பம் இருக்குமா என்ன? அதுவும் பயங்கரவாதிகள் தங்களது வாரிசுகளை வெளிநாடுகளில் நன்றாக வாழவைத்துக் கொண்டு அப்பாவி மக்களின் குழந்தைகளை பயங்கரவாதகச் செயல்களில் ஈடுபடுத்துவதை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அளவற்ற சகிப்புத் தன்மையுடன்; என்றாவது தங்களுக்கும் இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

தமிழகத்திலும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதையும் சக மனிதர்களுடன் வேறுபட்டு நிற்பதையும் அவர்கள் விரும்பவில்லை. இதனை நான் களத்தில் கண்டு இருக்கிறேன். ஆனால் சுயநலத்துடன் இயங்கும் இயக்கங்களின் முன்னால் அவர்கள்.கையறு நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. தங்களது குழந்தைகளுக்கு வெறுப்பைப் போதிக்கும் அவர்களைத் தடுக்க இயலாமல் வேதனையில் தவிக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

சில குறைகளைத் தாண்டி இந்தத் திரைபபடம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருப்பதிலும் இயக்குநரின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும். ராணுவம் தொடர்பான திரைப்படங்களில் விஜய்காந்த் அர்ஜூன் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தாலும் அவற்றில் வசனங்கள் மிகுந்திருக்கும். காட்சி அமைப்புகள் செயற்கைத் தன்மையுடனும் நம்பகத்தன்மை அற்றும் இருக்கும்.

ஆனால் அமரன் திரைப்படத்தில் பல காட்சிகளும் தத்ரூபமாகவும் இயல்பாகவும் நம்பும்படியாகவும் அமைத்ததற்கு இயக்குநருக்கு வாழ்த்துகள். உண்மையில் திரைத்துறையில் நீண்ட காலம் கழித்து தேசப்பற்றுடன் ஒரு திரைப்படம் வந்துள்ளது.

உண்மையில் பல சமூகச் சிதைவுக்கும் பிரச்சினைகளுக்கும் கலாசார சீரழிவிற்கும் தமிழக திரைததுறைதான் அடித்தளமாக இருக்கிறது. அந்த இடத்திலிருந்து இப்படி ஒரு திரைப்படம் வருவதே பெரிய விஷயம்தான்.

தமிகத்தில் இருப்பவர்கள் இனியாவது நல்ல திரைப்படத்திற்கு மட்டும் ஆதரவு தர வேண்டும். கலாசார சீர்கேட்டுக் கருத்துகளுடன் வரும் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அந்தப் பணத்தில் இல்லாதோர்க்கு உதவுங்கள். பணத்தை வீணடித்து வீணர்களை வாழவைக்க வேண்டாம்.

அமரன் திரைப்படம் தேவையான காலத்தில் வெளிவந்து தனது அமரத்துவத்தை அடைந்து இருக்கிறது என்பதால் பாராட்டும் வாழ்த்துகளும்.





எல்லை காக்கும் தெய்வங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.உங்களால்தான் நாங்கள் வாழக்கையினை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக