வியாழன், 28 நவம்பர், 2024

 அமரன் - இந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அமரன் என்ற வார்த்தைக்கு  நிரந்தரமானவன் என்ற பொருள். ஒருவன் நிரந்தரமாக வாழ்வது சாத்தியமில்லை; ஆயின் தனது வாழ்வியலாலும் செய்யும் செயல்களாலும் அமரத்துவம் பெறுகிறான். முந்தைய திரைப்படத்தை விட இந்தத் திரைப்படத்திற்கு இந்தப் பெயர் மிகச் சரியாக பொருந்தி நிற்கிறது.




ஒரு பயங்கரவாதி மக்களை அழிக்கத் தன் உயிர் துறக்கிறான். ஒரு ராணுவ வீரன் தனது தேசத்தின் மக்களைக் காக்க உயிர் துறக்கிறான். 

ஒரு பயங்கரவாதி பல அப்பாவி மக்களைக் கொல்லும் தனது தீச்செயலைத்.தடுத்து நிறுத்தும் ராணுவ வீரனைக் கொல்கிறான். ஒரு ராணுவ வீரன் பல அப்பாவி உயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு பயங்கரவாதியின் உயிரை எடுக்கிறான்.

இதில் ராணுவ வீரனின் செயல்தான் புனிதமானது. ஆனால் புனிதத்திற்கும் மனிதத்திற்கும் ஆதி காரணமாக அமைந்த இந்தத் தேசத்தில்தான் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கும் அவர்களது இயக்கங்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது.

அமரன் திரைப்படம் தமிழகத்தில் மக்களின் மனதில் உறங்கிக் கிடக்கும் தேசிய உணர்வினை சிறிதளவு தட்டி எழுப்பி இருக்கிறது. அதனையே இங்குள்ள பிரிவினைவாதிகளால்.தாங்கிக் கொள்ள இயலவில்லை. உடனே இந்தத் திரைப்படத்தின் உண்மை நாயகனான முகுந்த் வரதராஜன் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

இதனை மதம் சார்ந்த அரசியலாக மாற்ற மதத்தினைச் சார்ந்து இயங்கும் அரசியலமைப்புகள் முயல்கின்றன. சமூக வலைத்தளங்களில் ஹிந்துக்கள் மதம் சார்ந்த வெறுப்புணர்வுடன் நடந்து கொள்வது போல ஒரு கட்டமைப்புடன் கற்பனைக் கதைகளை எழுதுகிறார்கள்.

திரைப்படம் பார்க்கும் வெறி கொண்டு அலைந்த நான் திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்ப்பவனாக மாறி இருக்கிறேன். இவ்வளவு விமர்சனங்களை பார்த்தபிறகு அமரன் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது.

உடன் குடும்பத்துடன் சென்று பார்க்க இணையவழியில் திரைப்படம் பார்க்க முன்பதிவு செய்தேன். அநேகமாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்ததாகவே இருந்தது. அரங்கில் அப்படி ஒரு அமைதியை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. பயங்கரவாதத்தின் அழுத்தத்தை தமிழகம் அதிகளவு கண்டதில்லை. அந்நிய படையெடுப்புகளினால் நிகழ்ந்த தாக்கங்களும் தேசத்தின் பிறபகுதிகளை ஒப்பிடுகையில் தென்பகுதியில் குறைவு; அதிலும் தமிழகத்தில் இன்னும் சற்று குறைவு. அந்த அழுத்தம் பார்வையாளர்களிடம் அந்த அமைதியை உருவாக்கி இருந்தது.

கண்ணீர் விடாமல் அமரன் திரைப்படத்தை பார்த்தவர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்திருக்கும். அந்த அளவுக்கு அது.தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் குடும்பக் காட்சிகளில் மட்டும் ஒரு ஒட்டுதல்.இல்லை. ஒரு உண்மை இயக்குநரை பாதித்து அதனைக் காட்சியாக்குவது போல செயற்கையை காட்சியாக்குவது போலித்தனமாகவவும் கதையோட்டத்துடன் ஒட்டாததாகவும் மாறிவிடும்.

தலைவன் தலைவி காதலில் இருந்த ஒட்டுதல் குடும்பத்துடனான காட்சிகளில் அந்நியப்பட்டு நிற்கிறது. அதீத செயற்கைத்தனமாகவே அக்காட்சிகள் இருந்தன. கதாபாத்திரங்களின் நடிப்பும் வசனங்களும் கூட அவ்வாறே. அச்சமில்லை பாடலை முகுந்த் தனது குழந்தைக்கு சொல்லித் தரும் காட்சியும்,  இராணுவ வாகனத்தில் வீரர்கள் அந்தப் பாடலுக்கு காட்டும் உணர்வுகளும் அருமை அசத்தல்.

இதில் இன்னொரு தரப்பு விமர்சனமாக தலைவன் பிராமணர் என்பது மறைக்கப்பட்டது. அதற்கு இயக்குநர் கொடுத்த விளக்கம் நகைப்புக்குரியது. முகுந்தின் பெற்றோர் அவர் தன்னை பிராமணர் என்பதைவிட இந்தியனாக நினைப்பதிலையே பெருமை கொண்டிருந்தார் என்று சொல்லியதால் அவரை பிராமணராகக் காட்டவில்லை என்று.

இந்த இடத்தில் எனக்கு எழும் கேள்வி பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா அல்லது பிராமணர்கள் தவிர பிற ஜாதியார் தங்களை இந்தியர்களாக நினைப்பதில்லையா? என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் இந்த விளக்கத்தின் வாயிலாக.

முகுந்த் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வளவுதான். அவரது குடும்பமோ அல்லது அவரது மனைவியின் குடும்பமோ அதை விரும்பவில்லை என்பதாகக் காட்டுகிறார்கள். நாயகிக்கும் நாயகன் மீதான காதல் மட்டுமே காட்டப்படுகிறது. ராணுவம் என்பது நாயகனின் கனவு என்பதைத் தாண்டி அவருக்கு ராணுவத்தின் மீதாக எந்த ஈர்ப்பும் இருப்பது போல திரையில் காட்டப்படவில்லை.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல.என்பதாகத் தெரிகிறது. முகுந்தின் அம்மா ராணுவத்தில் மகன் சேருவதற்கு ஆதரவாகவே நின்றதாகச் சொல்லப்படுகிறது. உண்மைக் கதை என்று சொல்கிற பொழுது முழுவதுமாக உண்மைகளைச் சொல்ல என்ன தயக்கம் இருக்கிறது என்பது விளங்கவில்லை. தயாரிப்பாளர்களின் பின்னணி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தை அளித்திருக்கிறது. இயக்குநர் இதனைத் தவிர்த்திருக்கலாம்.

நடிப்பில் சாய்பல்லவி வாழ்ந்திருக்கிறார். அதுபோலவே ராணுவம் வரும் காட்சிகளிலும் நடிப்பும் திரைக்கதையும் அசத்துகின்றன. சிவகார்த்திகேயனும் நன்றாகவே செய்திருக்கிறார்.



இதில் தேசத்திற்கு ஆதரவாகச் செயல்படும் பொதுமக்களை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொல்வதைக் காட்டுகிறார்கள். அது உண்மைதான். அந்தப் பயத்தில்தான் பல பொதுமக்களும் தேசத்திற்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போலக் கூடுகிறார்கள்.

பொது மக்களில் ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைகள் மரணிப்பதில் விருப்பம் இருக்குமா என்ன? அதுவும் பயங்கரவாதிகள் தங்களது வாரிசுகளை வெளிநாடுகளில் நன்றாக வாழவைத்துக் கொண்டு அப்பாவி மக்களின் குழந்தைகளை பயங்கரவாதகச் செயல்களில் ஈடுபடுத்துவதை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அளவற்ற சகிப்புத் தன்மையுடன்; என்றாவது தங்களுக்கும் இந்தக் கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

தமிழகத்திலும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதையும் சக மனிதர்களுடன் வேறுபட்டு நிற்பதையும் அவர்கள் விரும்பவில்லை. இதனை நான் களத்தில் கண்டு இருக்கிறேன். ஆனால் சுயநலத்துடன் இயங்கும் இயக்கங்களின் முன்னால் அவர்கள்.கையறு நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. தங்களது குழந்தைகளுக்கு வெறுப்பைப் போதிக்கும் அவர்களைத் தடுக்க இயலாமல் வேதனையில் தவிக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

சில குறைகளைத் தாண்டி இந்தத் திரைபபடம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக மாறி இருப்பதிலும் இயக்குநரின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும். ராணுவம் தொடர்பான திரைப்படங்களில் விஜய்காந்த் அர்ஜூன் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தாலும் அவற்றில் வசனங்கள் மிகுந்திருக்கும். காட்சி அமைப்புகள் செயற்கைத் தன்மையுடனும் நம்பகத்தன்மை அற்றும் இருக்கும்.

ஆனால் அமரன் திரைப்படத்தில் பல காட்சிகளும் தத்ரூபமாகவும் இயல்பாகவும் நம்பும்படியாகவும் அமைத்ததற்கு இயக்குநருக்கு வாழ்த்துகள். உண்மையில் திரைத்துறையில் நீண்ட காலம் கழித்து தேசப்பற்றுடன் ஒரு திரைப்படம் வந்துள்ளது.

உண்மையில் பல சமூகச் சிதைவுக்கும் பிரச்சினைகளுக்கும் கலாசார சீரழிவிற்கும் தமிழக திரைததுறைதான் அடித்தளமாக இருக்கிறது. அந்த இடத்திலிருந்து இப்படி ஒரு திரைப்படம் வருவதே பெரிய விஷயம்தான்.

தமிகத்தில் இருப்பவர்கள் இனியாவது நல்ல திரைப்படத்திற்கு மட்டும் ஆதரவு தர வேண்டும். கலாசார சீர்கேட்டுக் கருத்துகளுடன் வரும் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அந்தப் பணத்தில் இல்லாதோர்க்கு உதவுங்கள். பணத்தை வீணடித்து வீணர்களை வாழவைக்க வேண்டாம்.

அமரன் திரைப்படம் தேவையான காலத்தில் வெளிவந்து தனது அமரத்துவத்தை அடைந்து இருக்கிறது என்பதால் பாராட்டும் வாழ்த்துகளும்.





எல்லை காக்கும் தெய்வங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.உங்களால்தான் நாங்கள் வாழக்கையினை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

சனி, 23 நவம்பர், 2024

நரக(கர)மயமாக்கல்

எனக்குப் பயணம் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் இயற்கையின் வெளிறிய வனப்பு இருக்கும் கிராமத்து சாலைகள் கூட இதமான ஒன்றாக இருக்கும் பரபரப்பான நகரத்து சாலைகளில் செல்வதைக் காட்டிலும்.

அப்படித்தான் ஒருநாள் செங்கல்பட்டிலிருந்து கேளம்பாக்கம் செல்ல திருப்போரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தேன். இந்தச் சாலை வனப்பகுதியைக் கடப்பதால் இருபுறமும் இயற்கை பச்சைநிறத் தோரணத்தை அமைத்து இருக்கும்.

இடதுபுறம் மாம்பாக்கம்  செல்லும் சாலை வர அந்தக் கிராமத்து சாலைகளை நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வனப்பகுதியில் மட்டும் மேடும் பள்ளமுமான சாலை. அதனைக் கடந்து கிராமத்து எல்லையை அடைந்ததும் சிறிய தார்ச்சாலையில் பயணம்.

இருபுறமும் நெற்வயல்கள். அந்த நெற்பயிர்கள் வேகமாக ஆடத்துவங்கின. அவை ஏதோ என்னிடம் கூற விழைவதைப் போல் இருக்க சற்று ஓரமாக நிறுத்திப் பார்த்தேன். இப்போது அவை எனது எதிர்திசைக்கு தலையைக் காட்டி மீண்டும் என்னை நோக்கி சாய்ந்தன. அவற்றின் தலை சென்ற திசையில் பார்த்தேன். தொலைதூரத்தில் கேளம்பாக்கத்தில் அமைந்த உயரமான கட்டிடங்கள்.

விவசாயியின் அறுவாள் அறுக்க வருகையில் கலங்காத இந்த நெற்பயிர்கள் இந்தக் கட்டிடங்களைப் பார்த்து நடுங்குகின்றன. விவசாயி அறுத்தாலும் தனது வம்சத்தை மீண்டும் மீண்டும் பெருகி தழைக்கச் செய்வான் என்பது அதற்குத் தெரியும் போல. ஆனால் இந்த கான்கிரீட் ராட்சசன் இரு கைகளையும் விரித்து பூமியையே விழுங்குவது போல வந்து கொண்டிருக்கிறான். அவன் நெருங்கி விட்டால் நெல் என்ன புல்லும் கூட முளைக்க இடம் தர மாட்டானே என்ற அச்சம் போல.


அச்சத்துடன் அவை வேகமாக மீண்டும் மீண்டும் சுழன்றாடின. வாடிய பயிரைக் கண்டு வாட நான் வள்ளலாரில்லையே. அவை பகிர்ந்த வருத்தத்தை என்னுள் வாங்கி நானும் வருந்தி மேலே வான் நோக்கி அவற்றிற்கும் எனக்கும் அறிவில் வித்தியாசம் வைத்தாய். ஆனால் என் இனம் அந்த பகுத்தறிவை கடவுள் மறுப்புக்கும் இன வெறுப்புக்கும் என்றாக்கி மற்றெதையும் சிந்திக்கக் கூட மறுத்து ஒதுங்கி நிற்கிறதே!! என்று இறையிடம் உனக்குக் கருணை மிகுதியாயிற்றே; ஏனிப்படி இதனை வேடிக்கைப் பார்க்கிறாய்; உனது கருணையை இவற்றின் மேல் காட்டக் கூடாதா என்றேன்

இறை மௌனமாய் இருந்தது எந்த பதிலுமளிக்காமல்; அது இயங்கியும் இயங்காமலும் நிலையாகவும் வினையினையும் விளைவினையும் வேடிக்கை பார்க்கும் ஒன்றல்லவா? எங்கோ பரவி விரவியுள்ள விவசாயிகள் விவசாயத்தின் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறார்.;விதைகளை சேகரிக்கிறார்;இயற்கையோடு உறவாடுகிறார்;பாரம்பரியத்தின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராவணன்கள்;இன்னொரு புறம் இயற்கையை பேணிக் காக்கும் ராமன்கள் என காலம் சுழன்று கொண்டு இருக்கிறது.

இன்னொரு நாள் வேலூரிலிருந்து சென்னை சாலையில் பயணித்துக் கொண்டு இருந்தேன். வாலாஜாபேட்டை சுங்கத்தை நெருங்குவதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள கிராமத்தில் ஒரு நெடிதுயர்ந்து நின்ற பாறை பாதியாக வெட்டப்பட்டு இருப்பதைக் கண்ணுற்றேன். அதிலிருந்து இரத்தம் போல் நீர் வடிந்து கொண்டு இருந்தது. இங்கிருந்து பார்க்கையில் கருரத்தம் மை பூசியது போல உறைந்து நிற்பதாக இருக்கும். மனது வலித்தது என்னுடைய இயலாமையை நினைத்து.

ஒரு விரல் புரட்சி என்பார்கள்; ஆனால் எனது ஒற்றை விரல் மட்டும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடும். அந்த கிராமத்தில் உள்ளவர்களும் என்னைப் போன்ற மனிதர்கள்தானே? அவர்களுக்கு இது வலிக்கவில்லையா? அல்லது தினமும் அந்த சாலையில் கட்ந்து போகும் ஆயிரக்கணக்கானவர்களும் என்னைப் போன்ற இயலாமையை கொண்டவர்களா? அதில் ஒருவர் கூட ஊடகவியலாளராக இருக்க மாட்டாரா? அறச் சீற்றத்தோடு போராடும் மனத்திண்மை கொண்டவர் எவரும் இருக்க மாட்டாரா? அவர்களுக்கெல்லாம் இந்த ஒற்றைவிரல் புரட்சி பற்றித் தெரியாதா?

அது போல இன்னொரு முறை திருச்சியிலிருந்து திருவையாறு செல்லும் சாலை அதிக வாகனங்கள் செல்லாத காவிரியின் இன்னொரு கரையில் பயணம். கரூர் திருச்சி சாலையில் நெஞ்சில் கனத்துடனும் பயத்துடனும் பயணித்த பல நாட்கள்; காரணம் மணல் ஏற்றி அசுர வேகத்துடன் செல்லும் லாரிகள். ஆனால் இந்தப் பயணத்தில் இந்தக் கிராமத்துச் சாலைகளிலும் மணல் வண்டிகள் பகலிலும் வரிசையாகச் சென்று கொண்டு இருந்தன. தஞ்சை மண்டலம் பாதுகாப்பு மண்டலம் என்று போராடியவர்கள் எவருக்கும் இந்த அளவற்ற மணல் அள்ளுதல் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லையா?

இதுபோல கனிமவளங்கள் கொள்ளை


போவது ஒரு புறமென்றால் நகரமயமாக்கல் என்று ஒவ்வொரு பேரூராட்சியும் பக்கத்தில் உள்ள கிராமங்களை விழுங்கி நகரமாகிறது; நகரம் மாநகரமாகிறது; அது மேலும் மேலும் அருகமை கிராமங்களை விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

காந்தி கிராம ஸ்வராஜ்யம், ராம ராஜ்யம் குறித்துப் பேசினார். ஜே சி குமரப்பாவின் வழி காந்தி சொன்ன கிராம பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த அனைத்துக் கருத்துகளும் ஆள்பவர்களுக்குத் தெரியாது அல்லது அதைக் குறித்துக் கவலைப்படத் தயாராக இல்லை. இப்படி கிராமங்களை நகரமாக்கி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றி விட்டால் நகரத்தில் வாழும் மனிதனுக்கு உணவு எப்படித்தான் கிடைக்கும்?

ஒரு நகரத்தின் சுற்றளவு குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும்; அதனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட பரப்பளவிற்கு அந்த நகரத்திற்கு உணவளிக்க விளைநிலங்களும் கிராமங்களும் இருக்க வேண்டும். அவை என்றும் நகரமயமாக்கப்படாது என்ற உறுதியை ஆள்பவர்கள் ஏற்படுத்த வேண்டும்; அல்லது அவர்களை அதைச் சட்டமாக்க மக்கள் காந்திய வழியில்  போராட வேண்டும்.

கிராமங்கள்தான் இந்த தேசத்தின் உயிர்நாடி; மனிதர்களின் சுவாசக் குழாய், உணவுக் குழாய் எல்லாம். அவற்றின் இருப்பு மிக மிக அவசியம். இது சாத்தியப்பட வேண்டும் என்றால் கிராமங்களில் மக்கள் கட்சிகளைத் தாண்டி தங்களது கிராம நலனுக்காக இணைய வேண்டும். கிராமத்திலும், பேரூராட்சிகளிலும் கிராமத்தின் சார்பில் பேசக் கூடிய பிரதிநிதிகள் இருக்க வேண்டுமே அன்றி கட்சிகளின் விருப்பங்களை, ஆளும் வர்க்கத்தின் விருப்பங்களைச் செயல்படுத்தும் பிரதிநிதிகள் இருக்கக்கூடாது.

நேர்மையான, நியாயமான, கட்சி சார்பற்ற பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். குறிப்பாக இதுநாள் வரை பல பிழைகளுக்கு காரணமாகவும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற துணையாகவும் இருந்தவர்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். கிராமங்கள் இதனை முன்னெடுத்தால் அன்றி அவர்களுக்கு வேறு வழி இல்லை.


எனது பங்காக நான் என்ன செய்வது என்ற கேள்வி எழ, இதனைப் பதிவதும், பகிர்வதும் என்று தோன்ற இதோ பதிந்து விட்டேன். என்னைப் போன்று வருத்தப்பட்ட ஜீவன்கள் சிலர் இருக்கக்கூடும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம். அறம் வெல்லும் என்ற எண்ணம் மிகுந்திருக்க வேண்டுகின்றேன்.

தர்மம் தோற்பது [போல இருக்கும். இறுதியில் அதுவே வெல்லும். அறம் மறவற்க; அறமே துணை.