வியாழன், 31 அக்டோபர், 2024

ஆலய தர்மம்

 சனாதன தர்மம் சிறக்க ஆன்மீக வளமும் ஆத்ம பலமும் பெற


மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவை எந்த கலப்படமுமில்லாத தூய்மையானதாகத் தேர்வு செய்து ஆலயங்களில் பயன்படுத்த வேண்டும்.

ஆலயங்களில் அதிகளவு மின்விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து எண்ணெய் வித்துகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்களை கலப்படமின்றி பயன்படுத்தி தீபங்களை ஏற்ற வேண்டும்.  குறிப்பாக கர்ப்ப கிருஹங்களில் மின்விளக்கு பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

பூமாலை என்பது வாழைநாரில் கட்டப்பெற்று ஸ்வாமிக்கு அளிப்பதே உத்தமமானது. மற்றவை ஏற்றதல்ல.

ஆலயத்திற்கு பூஜைப் பொருள்களை எடுத்துச் செல்ல நெகிழிப் பைகளை பயன்படுத்துதல் கேடானது.

ஆலயம் என்பது வியாபாரத்தலமல்ல அங்கு நாம் எதனையும் விலை கொடுத்து வாங்குவது நமக்கு நன்மை அளிக்காது.

பிரசாதம் என்பது கர்ப்பகிருஹத்தில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்டவை, அணிவிக்கப்பட்ட பூ மாலைகள் விபூதி குங்குமம் தீர்த்தம் இவை மட்டுமே. பிரசாதம் என்பது விற்கப்படவும் கூடாது.

ஆலயங்கள் நமக்கு இறைசக்தியை அளித்து நமக்கு ஆத்மபலத்தை அளிக்கவே ஏற்பட்டவை. அங்கு நாம் அமைதியாக இருந்தால் மட்டுமே இறையனுபூதியை உணரவும் பெறவும் இயலும்.

எந்த இறைத்தலமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை பிரவாகிக்க குறிப்பிட்ட ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆகமத்திற்கு உட்படாத புதிய சந்நிதிகள், கட்டிடங்கள் இவை அந்த ஆற்றலை நாம் பெற இயலாமல் செய்துவிடும்.

ஆன்மீகம் என்பது இலகுவான ஒன்றல்ல. அதனை அடைய மனமும் உடலும் பக்குவப்பட வேண்டும். பக்தர்களுக்கு வசதிகள் என்ற பெயரில் செய்யப்படும் அனைத்தும் இதனை சிதைத்து விடும்.

மலைக் கோவில்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். விஞ்ச் ரோப்கார் இவை அனைத்துமே நமது ஆன்மீக பயணத்திற்கான தடைக்கற்கள்.

வசதிகள் ஆன்மீகத் தலங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விடுகின்றன. ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோர் இந்த வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

தல யாத்திரை ஒவ்வொரு மாதமும் நிழ்த்த வேண்டிய ஒன்றல்ல. எந்த மகானும் ஒரே கோவிலுக்கு மீண்டும் மீண்டும் சென்றதில்லை;உள்ளூர் கோவிலை புறக்கணித்ததுமில்லை. மாதா மாதம் நான் திருப்பதி சென்றுவிடுவேன் என்பது அகங்காரத்தை அளிக்குமே ஆன்றி அனுபூதியை அல்ல.

நாம் தினமும் செல்வது உள்ளூர் கோவிலாக இருக்கட்டும். அங்கு  ஆகமப்படி அனைத்தும் நடப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதைச் சரியாகச் செய்தால் ஆங்காங்கு பரவிக் கிடக்கும் பல இறைச் சக்திகளும் அருளும் கூட நமக்குக் கிட்டும்.

வருடத்தில் ஒரு முறை தலயாத்திரை மேற்கொள்ளலாம். சென்ற கோவிலுக்கே செல்லாமல் புதிய ஆலயங்களுக்குச் செல்வது சாலச் சிறந்தது.

பொருள்  வேண்டி பயணிப்பதும் இறைவனிடம் பேரம் பேசுவதும் பாவத்தைச் சேர்க்கும் செயலாகும். அருள் வேண்டியே ஆலயம் நோக்கிய பயணம் இருக்க வேண்டும்.

சபரிமலை போன்ற இடங்களுக்குச் செல்கையில் அதற்கான விரதத்தை முழுமையாகக் கடைபிடிக்காமல் செல்வது பயனற்றது என்பதோடு பாவத்தைச் சேர்க்கும். அந்த விரதத்தை அடுத்தவருக்கு சரியாக சொல்லாமல் விடுத்து அவரையும் தவறான பாதையில் பயணிக்கச் செய்வது கூடுதல் பாவத்தைச் சேர்க்கும். சபரிமலை யாத்திரை சுற்றுலா அல்ல என்ற எண்ணத்தோடு செயல்படுவது மட்டுமே அதற்கான பலனை அளிக்கும்.

ஆலயங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அங்கு அமர்ந்து உண்பது சரியல்ல. அங்கு குப்பைகளைப் போடுவது சத்தமாகப் பேசுவது இவை அனைத்தும் பாபத்தைச் சேர்க்கும் செயல். உண்பதே சரியல்ல என்கிற பொழுது அங்கு இயற்கை உபாதைகளைக் கழிப்பது எவ்வளவு தவறான செயல்.

ஆன்மீகம் இலகுவானது அல்ல. நெருப்பினைப் பயன்படுத்துவது போல. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பாதிப்பு நமக்குத்தான்.

உள்ளம் பெருங்கோவில்; ஊனுடம்பு ஆலயம் என்ற நிலையினைப் பெற ஆலய யாத்திரை கவனத்துடனும் கூடுதல் அக்கறையுடனும் ஆன்மீக நாட்டத்தோடு செய்யப்பட வேண்டும்.

விரைவு தரிசனம் பெற காசு கொடுத்துப் போவதும் சிறப்புக் கட்டணங்களில் தரிசனம் பெறுவதும் ஆலயத்தின் நேர்மறை சக்திகளை நாம் பெறுவதைத் தடுத்துவிடும். அதனைத் தவிர்த்துவிடுவது சாலச் சிறந்தது.

இறை தரிசனத்திற்காக நாம ஜபத்துடன் காத்திருப்பது நமது ஆன்மீகத்தை உயர்த்தும் செயலாக அமையும். ஆத்ம பலத்தைப் பெருக்கும்.

தல யாத்திரைகளில் அதிக ஆலயங்களுக்குத் திட்டமிடுதலைத் தவிர்க்கலாம். தல யாத்திரையாக ஒரு ஆலயத்திற்குச் சென்றால் அங்கு முழுநாளும் இருத்தல் சிறப்பு.

ஆன்மீக விதிகளைச் சரியாகவும் முறையாகவும் பக்தர்களுக்குச் சொல்லி அவற்றைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் இவர்களுக்கு உண்டு. ஆகமப்படி அனைத்தையும் ஆலயத்தில் நிகழ்த்த வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு. இவற்றிலிருந்து இவர்கள் விலகினால் கூடுதலான பாபத்தைச் சேர்த்துக் கொள்வார்கள்.

ஒரு ஆலயத்தில் ஆகம மீறல் நடக்கிறது என்றால் அந்தக் கோவில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் அறங்காவலர்கள் அந்தக் கோவிலைச் சார்ந்த மடாதிபதிகள் ஜீயர்கள் உள்ளூர் மக்கள் என அனைவருக்கும் அவரவருக்கு விதித்தபடி பாபம் சேரும் என்பது சத்தியமான ஒன்று.







வெள்ளி, 18 அக்டோபர், 2024

 வேட்டை மற்றும்  தேடுதலில் உள்ள சங்கடங்களைத் தவிர்க்க தான் வசிக்கும் இடத்திலேயே தனக்கான உணவினை உருவாக்க முனைந்ததுதான் விவசாயத்தின் அடிப்படை.  

இன்று விவசாயம் ஒரு தொழிற்சாலை போல மாறி நிற்பது அதன் வீழ்ச்சியா வெற்றியா என்ற புரிதலில் பலருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதென்னவோ உண்மைதான். பெரும்பான்மை சமூகம் இதை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

மனிதன் தனக்கான உணவைத் தன்னருகே உருவாக்க முனைந்த காலை, அதனை இயற்கையின் போக்கிலேயே தான் கண்டறிந்த விதத்தில் முயற்சித்து திருப்தி கொண்டான். அவன் இயற்கை அளித்ததை எடுத்துக் கொண்டானன்றி அதன் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தவில்லை. 

அதில் உற்பத்தி அதிகரிக்க தேவைக்கு மிஞ்சியது பகிரப்பட்டு பின்னாளில் பண்டமாற்று என்றாகி பின் பணத்திற்கு மாற்று.என்றாகி இன்று தேவைக்கானது என்ற நிலை மாறி உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை ஆகி நிற்கிறது. 

இடைப்பட்ட காலத்தில் கூட வேலையாட்களின் கூலி, இயற்கை உரத்தின் விலை விதையின் விலை என அனைத்தும் ஓரளவுக்கு விவசாயியால் கையாள முடிந்தது. உற்பத்தி பொருள் மற்றும் பணத்திற்கான மதிப்பு ஒவ்வொன்றிற்கும் வேறுபாடாய் இருக்க இன்று விளைச்சலுக்குப் பிறகு திண்டாட்டத்திற்கு தள்ளப்படுகிறார் ஒவ்வொரு விவசாயியும். 

முன்னால் என்ன பயிரிட வேண்டும் எப்பொழுது என்பது முதல் விதை உரம் என அனைத்தும் விவசாயியின் திட்டமாக இருந்தது. இன்று அனைத்தும் யாரிடம் இருந்து உருவாகிறது எனத் தெரியவில்லை ஆனால் அவை விவசாயியின் அனுபவத்தைச் சார்ந்ததாக அமைய இயலாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

இன்று இயற்கை விவசாயம் என்ற பெயரில் நுகர்வோர் மீது அதீத விலை உயர்வை  திணிக்கிறார்கள். நாட்டு மாட்டுப் பால் நாற்பது ரூபாய் விற்றது இன்று ₹100 லிருந்து ₹120 ரூபாய். மிகக்குறைந்த விலையில் கிடைத்த நாட்டு பசுக்கள் இன்று லட்சக்கணக்கில் விலை உயர்ந்திருக்கிறது. பணம் இருப்பவருக்குத்தான் நாட்டு மாட்டு வளர்ப்பும் அதன் பயனும் என்ற எண்ணத்தில் செயல்படுவதை சமூக அக்கறை என்று சொல்லப்படுவது நகைப்புக்குரியது. 

இதனைச் செய்பவர்கள் பெரும்பான்மையோர் ஏழைகள் குறித்து அதீதக் கவலையோடு பேசுபவர்கள். பணக்காரருக்கு கிடைக்கும் அனைத்தும் ஏழைக்கும் கிடைக்க வேண்டும் என்ற நீதி பேசுபவர்கள். ஆனால் செயலில் மாறுபட்டு நிற்பவர்கள். 

சிலர் தற்சார்பு என்று பேசுகிறார்கள். ஆனால் இது கம்யூனிஸத்தின் தனிமனித உரிமை என்ற இடத்திலிருந்து உருவாகி நிற்கிறது "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்ற இந்திய சிந்தனைத் தளத்தில் இருந்து அல்ல. தனி மனித உரிமை தனி மனித தேவை சார்ந்த அனைத்தும் சமூகத்தில் நல்லனவற்றை உருவாக்காது. 

சமூகத்தின் நன்மைக்காக உருவாக்கப்படும் திட்டங்கள் மற்றும் முனைப்புகளும் மட்டுமே ஆக்கபூர்வமான அமைதியான சமூகத்தினை உருவாக்கும் நிலைக்கு நகர்த்தும்.  தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவினை அளிக்க வேண்டிய கடமை இந்த உலக மக்களுக்கு இருக்கிறது என்பதால்தான் அந்த வரிகள் பாரதியின் சிந்தனையிலிருந்து உதித்தெழுந்தது. 

இன்று உற்பத்தி சார்ந்து இயங்கும் விவசாயத்தை முழுவதுமாக தன் தேவைக்கு என்று நகர்த்துவது கொலை பாதகமாகும். ஏனெனில் உற்பத்தி திறனற்று நிற்கும் மனிதர்களின் உணவுத் தேவையினை இது பாதிக்கும். அனைவருக்கும் அதிக பணம் கொடுத்து உணவினை வாங்க இயலாத சூழலில் இருக்க இது ஆபத்தானதாகும். 

தற்சார்பு என்பது ஒரு கிராம அளவில் துவங்கி மாவட்டம் மாநிலம் தேசம் என அனைத்து சமூகத்தினையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். தனிமனிதனின் தற்சார்பு எண்ணம் ஒட்டு மொத்த தேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமையுமாறு இருக்க வேண்டுமே அன்றி தன்னலத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இருக்கக்கூடாது. 

தண்ணீர் காற்று உணவு இவை அனைத்தும் அனைத்து மனிதர்க்குமான அடிப்படைத் தேவை. நமது முனைப்புகள் அனைவர்க்கும் இவை சுத்தமானதாகவும் தரமாகவும் கிடைப்பதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். 

நாம் பல்லாயிரம் மைல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறோம். இது உகந்தது அல்ல. உடனே நிறுத்துவது பேராபத்து. நமது வேகத்தினை முதலில் குறைக்க வேண்டும். 

விவசாயம் என்பது நமது உணவுத் தேவைக்கு மற்றும் உபரி மற்றவர்க்கானது. இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. உழைப்பு மட்டுமே நாம் கொடுப்பது. உழைப்பும் நமக்கு உடல் நலன் என்ற ஒன்றை ஈந்து விடுகிறது. 

நமது குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் நமது கிராமத்திற்குள்ளாக இருந்தே பெற முயற்சிக்க வேண்டும். நிலம் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒற்றைப் பயிர் என்ற முறையிலிருந்து முழுமையாக கலப்பினப் பயிருக்கு மாறாவிட்டாலும் சிறிது பகுதியையாவது தனது குடும்பத்திற்கு தேவையானவற்றை பயிரிட முனைய வேண்டும். 

புளி, பருப்பு, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் , நெல், சிறுதானியங்கள் என தனது அனைத்து தேவைகளையும் ஒரு கிராமம் நிறைவு செய்து கொள்ள முயல வேண்டும். உபரியினை பக்கத்து கிராமங்கள் நகரங்களுக்கு பகிர முனையலாம். இங்கு பகிர என்பது இலவசமாக அல்ல அதே நேரத்தில் எங்கோ தொலை நகரத்தில் வியாபாரி நிர்ணயிக்கும் அதீத விலைக்கும் அல்ல. 

நமது ஆடைத் தேவைகளை அருகில் வாழும் சிறு நெசவாளிகளிடமே பெற முனையலாம.  நமது விவசாயக் கருவிகளை அருகில் உள்ள சிறு தொழில் முனைவோரிடமிருந்து பெறலாம். பெருந்தொழில் நிறுவனங்கள் சில பொருள்களை உற்பத்தி செய்வதற்காகத் தேவை. ஆனால் நமது அனைத்துத் தேவைகளுக்கும் அவற்றைச் சார்ந்திருப்பது என்பது சரியானதல்ல. 

நமது ஊரில் மழை பெய்கிறது. தோட்டத்துக் கிணறு நிறைந்தால் அந்த உபரிநீர் வெளிப்போந்து மழைநீர் வடிகால்வாய் வழியாக நமது ஊர் குட்டை குளங்களை நோக்கிச் செல்லும். அதுவும் நிரம்பினால் அங்கிருந்து நீர் வெளியேறி பெருங்கால்வாய்களை அடைந்து பக்கத்து கிராமத்து ஏரி குளங்களை நோக்கி நகரும். பின் கடைசியாக அருகிலுள்ள சிற்றாற்றினில் கலந்துவிடும். 

எங்கோ மலையுச்சியினில் விழும் மழைநீர் அருவியாகி பின் ஆறாகி பெருகி ஓடும். அதன் நீர் கிளைக் கால்வாய்கள் வழி பல கிராமத்து ஏரிகளை வரிசையாக நிரப்பும். உபரிநீர் மட்டுமே அடுத்தடுத்த நீர்நிலைகளை நோக்கி நகரும். பின் மீண்டும் அதே ஆற்றிலோ அல்லது வேறு எங்கோ சென்று கடலினை அடைந்து விடும். இயற்கையின் இந்த சுழற்சி இயல்பாய் நிறைந்தேறும் மனிதன் சரியாக ஏரி கால்வாய்களை சுத்தம் செய்து சரியாக பராமரித்து வரும்பொழுது மட்டுமே. 

ஏரியில் நிரம்பிய தண்ணீர் கூட குறுங்கால்வாய்கள் வழியாக அனைத்து நன்செய்நிலங்களையும் சென்றடையும். இன்று மனிதன் தனியுரிமை என்றுகுறுக்கிக் கொண்டதால் கால்வாய்கள் குறுகின. நீர்நிலைகள் அருகின. 

இயற்கையின் இந்த நீர்சுழற்சியே நிலத்தடி நீரை நல்ல அளவில் பராமரித்து வரும். பேராசை மனதினை ஆக்கிரமிக்க கால்வாய் நீர்நிலைகளை மனிதன் ஆக்கிரமிக்க இந்த சுழற்சி தடைபட்டது. பின்னர் ஆழ்துளைக் கிணறிட்டு பாலுக்கு மேலாக ரத்தத்தை உறிஞ்சுவதைப் போல நிலத்தின் ரத்தத்தையும் உறிஞ்சும் வல்லசுரராய் மாறி நிற்கிறோம். 

நீரும் நிலவளமும் நமது நமக்கென்ன என்ற பொறுப்பற்ற தன்மையினால் நாளும் சுரண்டப்படுகிறது. கொள்ளையடிக்கப்படுகிறது. இந்தக் கடமை விவசாயிகளிடத்து இருக்கிறது. வளங்களைக் காத்து நீர் சுழற்சியைப் போல வளச்சுழற்சியை உருவாக்கி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி கிராமங்களை கிராமமாய் உயிர்ப்புடன் வாழவைக்க அவர்களால் மட்டுமே முடியும். 

ஒவ்வொரு கிராம விவசாயிகளும் இணைந்து தங்களது விவசாய நிலவளத்தையும், நீர்நிலைகளையும் போற்றிப் பாதுகாக்க முற்பட வேண்டும். தங்களுக்கான விவசாயப் பயிர்களை காலம், மண்ணின் தன்மை அறிந்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கிராமத் தற்சார்பினை நோக்கி நகர வேண்டும். 

கிராமத்தில் வாழும் எந்த ஒரு ஜீவனும் ரேஷன் அரிசிக்காக கையேந்தி நிற்காமல் உங்களுடன் இணைந்து உழைத்து தங்களுக்கான உணவினைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

உபரியான உற்பத்தி மட்டுமே ஏற்றுமதிக்கு என்ற எண்ணமும் உற்பத்தி தனக்கும் தனது ஊருக்கு மாவட்டத்துக்கு மாநிலத்துக்கு என்ற எண்ணம் நமக்குள் உறுதியாய் நிற்க வேண்டும். பணத்துக்காக அல்ல வாழ்வதற்காகவே உணவு. 

 அனைவரும் இணைந்து இதனை முன்னெடுக்கையில் நமக்கான தேவைகள் நம்மிடமே உற்பத்தியாகும். வெளியிலிருந்து பெறுவது குறையும். நிச்சயம் பொருளாதாரம் உயரும். ஏனெனில் நிச்சயம் உபரி இருக்கும். உபரி இல்லை என்றாலும் கிராமத்திலுள்ள எவரும் வெளியே  கையேந்தாத நிலை உருவாகும். உருவாக்க வேண்டும். 

இந்தத் தேசம் வல்லரசாக வேண்டுமெனில் ஒவ்வொரு கிராமமும் தற்சார்பு பெற வேண்டும். குறுதொழில்களைச் செய்ய இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் வாயிலாக ஒரு தாலுகாவின் தேவையை பூர்த்தி செய்யலாம். 

நான் எழுதியதில் பிழை இருக்கக்கூடும். எனது நோக்கத்தில் இல்லை.  அனைத்துக் கிராமத்திற்கும் ஒரு பொது மாடல் இருக்க இயலாது. ஒவ்வொரு கிராமமும் அதற்கான தற்சார்பு முறையை நோக்கி நகர்கையில் வேறொரு கிராமத்துடன் கைகோர்த்துக் கொண்டால் சாத்தியக்கூறுகளின் சதவிகிதம் அதிகமாகக் கூடும்.