திங்கள், 8 செப்டம்பர், 2025

நீரின்றி அமையாது...........

         நீரின்றி அமையாது உலகு; நீரின்றி அமையாது உழவு; நீரின்றி அமையாது உணவு; நீரின்றி அமையாது உயிர். 


        இந்த பிரபஞ்சம் மட்டுமல்ல இந்த பிண்டம் என்கிற உடலும் பஞ்ச பூதத்தினால்தான் ஆனது என்று பல ஞானியரும் யோகியரும் கூறிச் சென்றுள்ளனர். 

        உலகம் மட்டுமல்ல இந்த உடம்பும் 70 சதவிகிதம் நீரால் நிறைந்திருக்கிறது. ஆனால் என்ன கற்றிருந்தும் "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவனின் வாசகத்தினை நாம் என்றும் பின்பற்றுவதில்லையே.

        நாம் இப்பொழுதும் இந்த புவியின் அமைப்பினைச் சற்றே கவனம் கொண்டு கண்டால் விண்ணிலிருந்து வீழும் மழைத்துளிகள் சங்கமமாகி மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவற்றோடு சங்கமமாகி ஓடை என மாறி  குட்டை குளம் ஏரி என தங்கி பின் சிற்றாறாகி பெரும் ஆற்றில் சங்கமித்து அது மற்றொன்றில் இணைந்து முடிவில் சாகரத்தில் சங்கமமாகிறது. மீண்டும் விண்ணோக்கி ஏகுகிறது மழைத்துளியாய் பிறப்பெடுக்க. இஃது இயற்கை அமைத்து வைத்த பாதை.


        ஓடைகளை, வாய்க்கால்களை  நிரவி நிலத்தோடு இணைத்து பட்டா வாங்கிக் கொள்கிறோம்.குளங்களை ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக மாற்றுகிறோம். வீடு கட்ட மணல் அள்ளி ஆற்றினை மலடாக்குகிறோம்.  சாகரத்தினை நீர் அடையும் வழியை அடைத்து இயற்கை சக்கரம் இயல்பாய் சுழலத் தடை ஏற்படுத்துகிறோம்.

        இதோடு விட்டோமா, வீதிதோறும் இயற்கையாய் அமைந்த அல்லது செய்வித்த மழைநீர் வடிகால்களை கழிவுநீர்க் கால்வாயாக மாற்றுவதோடு


குப்பை போடும் இடமாக மாற்றி விட்டோம். அனைத்து நீர் நிலைகளிலும் நாம் செயற்கையாய் உருவாக்கிய கழிவுகளால் நிரப்பி இருக்கிறோம். அப்படி இயற்கையை வஞ்சனை செய்வதற்கு நாம் கிஞ்சித்தும் வெட்கப்படுவதில்லை. 

        இதற்கு மேலும் தொழிற்சாலைகளை நிறுவி அதன் கழிவுகளை நீர்நிலைகளில் கலக்கிறோம். நீரின்றி அவதிப்பட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீரான புவியின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறோம். நீர் தீர்ந்தபிறகு சிறிது கூட நன்றியுணர்வு இல்லாமல் அதிலே சாயக்கழிவினை கலந்தோரும் இப்புவியில் உண்டு.

        இவற்றையெல்லாம் இறைவன் அறிய மாட்டானென்று சுற்றுச் சூழல் பாதுகாக்க வேண்டுமென்று பதாகை ஏந்துவோம்; பேரணி நடத்துவோம். வீதிமுழுதும், ஊர் முழுதும், நாடு முழுதும் என மரக்கன்றுகளை நடவு செய்வோம். நாளை அதற்கு நீரெப்படி என்ற எண்ணம் சிறிதும் இன்றி நம் வேலை பார்க்க நடையைக் கட்டுவோம். மீண்டும் ஓர்நாள் கூடி மரக்கன்றுகள் அழிந்து போன அதே இடத்தில் புதிய பதாகை புதிய சிறப்பு விருந்தினர் என புதிய மரக்கன்றுகளை நடவு செய்வோம்.

        நமது தொழிற்சாலைகளுக்காக, சாலை அமைக்க, கோவில் கட்ட என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி சாய்ப்போம். பசுமை வீடுகள், பசுமைச் சாலைகள் என அவற்றிற்கு பெயர்சூட்டி விழா எடுப்போம்.  கார்பன் ரேட்டிங்கிற்காக மரங்களை அழித்து ஒரு புறம் காற்றாலைகள், வேறொரு புறம் மரக்கன்றுகள் நடவு என வாழ்க்கை விழாக் கோலமாகத்தான் போகிறது. 

        மழைநீர் செல்லும் பாதையை அடைப்பது மட்டுமல்ல அதை ஈர்க்கும் மரங்களை அழிப்பது மட்டுமல்ல மழைத் துளிகள் வீழ்ந்து அருவியாகவும் ஆறாகவும் பெருக்க உதவும் மலைகளை வெட்டிக் கொள்ளை அடிப்பது மட்டுமல்ல அதன் வேரையும் வேரடி மண்ணையும் அல்லவா விற்றுப் பணமாக்குகிறோம்.

        நாளைய பிணங்கள் இன்றெரியும் பிணத்தை வேடிக்கை பார்க்கின்றன என்ற வாசகங்களைப் படித்து அந்த நொடி மெய்சிலிர்க்க மெய்ஞானம் விவாதித்து அகன்ற அந்நொடி முதல் பொருள்முதல்வாதத்தில் வீழ்ந்து திளைக்கிறோம் சாக்கடையும் புரளும் பன்றிகளைப் போல.

        இத்தனை பாதகங்களை பிரபஞ்சத்திற்கு செய்து வானம் பொய்த்துவிட்டது பருவம் தவறி மழை பொழிந்து பயிர்களை நாசமாக்கி விட்டது என்று இயற்கையின் மீது ஐபிசி சொல்லி குற்றப் பத்திரிக்கை எழுதுவதில் நமக்கு ஈடு இணை நாம் மட்டுமே.

        ஒரு தனி மனிதனுக்கோ, ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு ஊருக்கோ, ஒரு மாநிலத்திற்கோ அவர்கள் நீரினை எப்படி மதிக்கிறார்கள் என்பதனைப் பொறுத்தே அவர்களின் வாழ்க்கை அமையும். 

        இந்தத் தேசத்தின் பண்பாட்டில் சடங்குகளில் நீருக்கு மிக முக்கியத்துவம் உண்டு. ஒரு ஒப்பந்தப் பத்திரத்தைக் காட்டிலும் நீரை கைகளில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுப்பது என்பது மிக அதிக உத்திரவாதத்தினைக் கொண்டதாகக் கருதப்பட்ட தேசம் இது. 

        நதிகளைத் தாயாகக் கடவுளாகப் பார்த்து வந்த தேசம். இயற்கையை பஞ்ச பூதங்களைக் கடவுளாகப் போற்றிய தேசம். அவை மூட நம்பிக்கைகள் அல்ல. ஆனால் அப்படி மூடநம்பிக்கை என்று பேசப்பட்டதால் இன்றையத் தலைமுறை தனது பண்பாட்டின் ஒரு கூறின் நீட்சியை அதன் பெருமையை உணராமல் துண்டித்துக் கொண்டு இருக்கிறது. 

        பாற்கடல் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு, கங்கையைத் தலைமேல் கொண்ட ஈசன், காவிரி உற்பத்தியாகக் காரணமான கமண்டலம் கொண்ட  அகத்திய முனி, இந்திரனுக்கான பூஜையை மறுத்து குன்றேந்தி நின்ற கோவிந்தன், குன்றிருக்கும் இடம் எல்லாம் கோவில் கொண்ட குமரன் இவை போன்ற இன்னும் பலவும் பிரபஞ்சத்திற்கு அடிப்படையானபஞ்ச பூதத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் பாரதக் கலாசாரக் குறியீடுகள். 

       ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஸ்தல விருக்ஷம், ஒரு தீர்த்தம், தீர்த்த


யாத்திரை என்ற ஒரு வழக்கம் இது அத்தனையும் நமது பண்பாட்டில். ஆனால் இன்று அரச மரத்தையும் ஆல மரத்தையும் அடியோடு பெயர்த்தெறிந்து விட்டு அதனடியில் இருக்கும் பிள்ளையாருக்கு கோவில் கட்டும் மூடத்தனம். எந்த ஸ்தல விருக்ஷமும் பெரிய அளவில் பாதுகாக்கப்படுவதில்லை. கோவில் குளங்கள் வழிபாட்டில் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

        உணர வேண்டியது, பெருமைப்பட வேண்டியது, கட்டிக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. வாழ்வில் வளமில்லையா, தொழிலில் பிரச்சினையா, சமூகத்தில் பிரச்சினையா பரிகாரம் ஒன்றுதான் இயற்கைக்கு எந்த குந்தகமும் நமது செயல்களால், நமது தொழிலால் நேரக் கூடாது.

ஞாயிறு, 16 மார்ச், 2025

குடும்பம் எனும் கலைப்படைப்பு


 வீதியில் நடந்து செல்கையிலும் வாகனத்தில் கடக்கையிலும் இரண்டு கவுதாரிக் கோழிகள் இணையாக நடந்து செல்வதைக் கவனிப்பதுண்டு. முதலில் நம்மைக் கண்டதும் மிகுந்த வேகத்துடன் ஓடி ஒளிந்தவை இவன் சைவ உணவுக்காரன் என்றறிந்தனவோ என்னவோ வேக நடைக்கு தன்னை மாற்றிக் கொண்டன.

அடிக்கடி அவற்றைக் காண்பதால் சில நேரங்களில் வாகனத்தை நிறுத்தி அவற்றிடம் கேட்பதுண்டு. இரண்டு பேரும் எத்தனை நாள் ஜாலியாக சுற்றப் போகிறீர்கள். பொறுப்பு வேண்டாமா? குடுப்பத்தினைப் பெருக்க வேண்டாமா எனக் கேட்பதுண்டு.
சற்றே நின்று தலையைச் சாய்த்து பார்த்து விட்டு செடிகளின் உள் நுழைந்து கடந்து சென்று விடுவார்கள் இருவரும். பின்னர் வீட்டுத் தோட்டத்தில் இருவரும் உலா வருவதுண்டு. எட்டிப் பார்ப்பதும் மறைவதுமாகவும் தங்களது உணவினைத் தேடுவதுமாக இருப்பர்.
சில நாட்களுக்கு முன்னர்தான் வாகனத்தை எடுக்கையில் கவனித்தேன்; சாலையோரமாக இரண்டும் தங்களது குஞ்சுகள் சூழ நடைபோட்டுக் கொண்டு இருந்தன. உடனே மகளை அழைத்தேன். இங்கே பார் இவர்கள் குடும்பமாக வந்திருக்கிறார்கள் என்று. எனது குரலைக் கேட்டதும் இரண்டும் தங்களது குஞ்சுகளுக்கு முன்னும் பின்னுமாக நின்று கொண்டன எதிர்ப்புற காட்டின் வேலியோரத்தில். மகள் வந்து பார்த்த பின்பு அவை அங்கிருந்து நகரத் துவங்கிவிட்டன. கேட்டுகிட்டே இருந்தே குடும்பமா வந்துட்டாங்க என்றாள் மகள்.
இரண்டு நாள் கழித்து குடும்ப சகிதமாக தோட்டத்துக்கு வந்துவிட்டனர். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த நான் மகளிடம் சொல்ல இன்னும் அருகே பார்க்க மகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எவ்ளோ குட்டியாயிருக்கு என்று ஆச்சரியித்தாள். பேஷன் ஷோவில் நடை பயில்வது போல வரிசையாக தோட்டத்தில் உலா வந்தார்கள். ஒரு குடும்பத்தினைப் பார்க்கையில் மகிழ்வு ஏற்படுகிறதுதானே. மீண்டும் சில நாட்கள் கழித்து அவர்கள் உலா வருவதைக் கண்டு மகள் அலைபேசியில் எடுத்த காணொளியைத்தான் இணைத்துள்ளேன்.
குடும்பம் என்பது மிக அழகானது. அது ஒரு ஆகச் சிறந்த கலைப்படைப்பு போலத்தான். இன்று வெள்ளித் திரையிலும் சின்னத் திரையிலும் படைக்கப்படுவதைப் போல நிச்சயமாக நமது குடும்பங்கள் இருந்ததில்லை,. ஆனால் இன்று குடும்பம் என்றாலே இப்படித்தானோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் வண்ணம் பல குடும்பங்களும் இயக்குநர்கள் கட்டமைத்த புனைவுகளை தங்கள் வாழ்க்கையில் பொருத்து இந்த தேசத்தின் அழகிய கலைப் படைப்படைப்பினைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு; இந்த வரிகள் குடும்பத்துக்கு இல்லையா? கூட்டுக் குடும்பமாக இருந்த போது ஒருவரை ஒருவர் தாங்கித்தானே குடும்பம் வலுவாக சிதையாமல் தன் நிலையிலிருந்து மேலெழுந்து வந்தது. ஆனால் இன்று சிறு சிறு துண்டுகளாக தேங்காய் சில்லுகளைப் போல சிதறி இருக்கும் பொழுது அந்தக் கலைப் படைப்பைக் காண இயலாத ஏக்கம் பல பெரியவர்களின் மனங்களில் ஆறாத இரணமாக இருக்கக் கூடும். அதில் வடியும் சீழினைக் கூட அவர்களால் வெளிப்படுத்தி விட இயலாது. கூட்டுக் குடும்பத்தில் இல்லாதிருந்தவர்களின் மனதில் கூட இனம் புரியாத ஏக்கம் இருக்கக் கூடும்.
இன்னமும் காலம் கடந்து விடவில்லை அந்த அழகிய கலைப் படைப்பினை மீளுருவாக்கம் செய்வதற்கோ, இன்னும் கூடுதலாக மெறுகேற்றுவதற்கோ இந்தத் தலைமுறை முடிவெடுத்தால் அதனைச் சாதித்துக் காட்டி விட முடியும்.
அலுவலகத்தில், நாம் செல்லும் சாலையில், நாம் செல்லும் ஊர்களில் இனந்தெரியாத முகந்தெரியாத மனிதர்களிடம் நம்மால் இணக்கமாக நடந்து கொள்ள இயலுகிறது. ஜாதி மதம் கடந்து சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என எழுதப் பேச முடிகிறது. அதனை நமது இரத்த உறவுகளிடம் நடைமுறைப்படுத்துவதில் என்ன வெறுப்பு, வன்மம் என்றுதான் புரியவில்லை,
தனித்து தனித்து என்கையில் நான் நான் என்கையில் நாம் தனிமைப்பட்டு நிற்கிறோம். ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் உயர்த்தி விட்டால் அந்த மகிழ்வை அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகையில் அது பல்கிப் பெருகுமல்லவா?
இந்தத் தலைமுறை நினைத்தால் இனி தனித்து பிரிந்து வாழப்போவதில்லை என்று முடிவெடுத்தால் நிச்சயம் சாதிக்க இயலும். வேலை வாய்ப்புக்காக சகோதரர்கள் வெளியே சென்று வசிக்க வேண்டியது இருக்கிறதா; காலையில் இரை தேடிச் செல்லும் பறவை மீண்டும் கூடடவைதைப் போலே ஒரு கூட்டை மட்டும் வைத்துக் கொள்ளலாமே? நம் குழந்தைகளை பெற்றோரிடமே விட்டு வளர்க்கலாமே. வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ நமது கூடடைந்து கூடிக் களிக்கலாமே.
இன்று பல குழந்தைகளுக்கு அவர்களது நெருங்கிய உறவுகளே அறிமுகமில்லாமல் இருக்கிற ஒரு கொடுமையான காலமிது. பல பெற்றோரும் தங்களது உறவின் குடும்ப நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. அதற்கு எப்பொழுதும் சொல்லப்படும் பதில் அவனுக்கு ஸ்கூல் இருக்கு. ஸ்கூலில் அடிக்கடி லீவு போடக் கூடாது என்பார்கள். குழந்தை அங்கன்வாடிக்குச் செல்வதாக இருந்தாலும் கூட.
//** முதலில் ஒவ்வொரு பண்டிகையையும் சகோதரர்கள் அனைவரும் பெற்றோருடன் சேர்ந்துதான் கொண்டாட வேண்டும் தனியாக அல்ல என்றூ முடிவெடுக்க வேண்டும். சகோதரர்கள் இல்லை சகோதரிகள் மட்டுமே என்றால் அன்று சிறிது நேரமாவது உங்கள் கணவர் குழந்தைகளோடு அவரவரது பெற்றோருடன் கொஞ்சம் நேரம் செலவழிக்கலாம்.
பெற்றோர் இல்லையா மூத்த சகோதரருடன் பண்டிகையைக் கொண்டாடலாம். எப்படியோ எங்கு சாத்தியமோ அங்கு அத்தனை உறவுகளும் ஒன்று கூடி அது தீபாவளியோ பொங்கலோ அனைவரும் ஒன்று கூடி கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்துச் செயல் படுத்திப் பாருங்கள். நிச்சயம் மாற்றத்தினை உணர்வீர்கள். **//
//**அன்பு கொடுப்பதற்காக; அன்பளிக்கும் வள்ளலாக நம்மை மாற்றிக் கொள்ள முயல்வோம்**//
இது எதுவும் சாத்தியமற்ற ஒன்றல்ல. மனம் அதனை விரும்ப வேண்டும் அவ்வளவே. உறவுகள் கூடிப் பிணைந்து வாழ்வது அனைத்து வளத்தினையும் பல்கிப் பெருகச் செய்யும். பெற்றோர்கள் நமது குழந்தைகளை அக்கறையுடன் வளர்ப்பார்கள்.
நாம் நமது வேலை என்று ஓடுகையில் வயதான பெற்றோர்கள் குழந்தைகளின் பொறுப்பினை ஏற்கையில் அவர்களது தனிமை விரக்தி ஆகியன விலக்கப்படும். அவர்களை அது அவர்களது கடைசி காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். நமது வேலை பளுவில் நம்மால் அளிக்க இயலாத நேரத்தினை குழந்தைகளுக்கு அவர்கள் அளிக்கக்கூடும். குழந்தைகளும் மிகச் சரியான பாதையில் செல்ல உதவும். முதியோர்கள் ஆதரவற்று இருக்கும் நிலை ஏற்படாது.
தாய் தந்தை உறவுகளைப் பிரிந்து எங்கோ தொலை தேசத்தில் கிடைக்கும் வாழ்க்கைதான் வாழ்க்கை என்று ஏமாந்து போகிறார்கள் பலரும். பணம், சொத்து சுகம் வாழ்விற்குத் தேவைதான். ஆனால் அதுவே வாழ்க்கை அல்ல. எதையும் கவனிக்க அதிசயிக்க பெருமைப்பட வாழ்த்த நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை. . வாழ்க்கை என்பது ஒவ்வொரு நொடியினையும் அனுபவித்து ரசித்து வாழத்தான்.
இந்தக் கவுதாரிக் குடும்பம் கூடித் திரிவது போல கூடி பொருள் தேடி, கூடி உணவருந்தி, கூடி இறை தேடி நாடி, வாழ்கையில் வரும் இன்பம் கோடி கோடி. பொருளை மட்டுமல்ல வேலையை இன்ப துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள நம்மருகில் நமக்காக ஒரு கூட்டத்தை உருவாக்கி வைப்பதுதான் ஒரு ஆகச் சிறந்த கலைப் படைப்பாக இருக்கக்கூடும்.
நமது வீட்டிற்கு நமக்காக விளக்கேற்ற வந்த பெண்ணை தாங்கித் தூக்கி கொண்டாடி மகிழ்ந்தால்தானே நமது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். நம்மைப் பிரிந்து இன்னொரு குடும்பத்தினை தூக்கி நிறுத்தச் சென்றுள்ள நமது வீட்டுப் பெண்ணினை மறக்காமல் அவளையும் அவள் குடும்பத்தையும் வாஞ்சையோடு அணுகுவதுதானே சாலச் சிறந்தது. வாழச் சென்ற பெண்ணோ வாழ்விக்க வந்த பெண்ணோ இரண்டு பேரையும் ஒன்றென ஒவ்வொரு குடும்பமும் உணர்கையில் குடும்பம் என்கிற கலைப் படைப்பு மிளிரத்தானே செய்யும்.
வாழ்க்கை ஆகச் சிறந்த ஓவியம்; ஆகச் சிறந்த இசை; ஆகச் சிறந்த நாட்டியம்; ஆகச் சிறந்த நாடகம்; இன்னும் என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம். ஆனால் அதனை அப்படி ஆகச் சிறந்ததாகச் செய்யும் உறுதியுடன் உறவுகளுடன் கூடி நிற்கும் குடும்பத்தால் மட்டுமே சாத்தியம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இது வெற்று வார்த்தை அல்ல; வாழ்வியல் பாதை.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

பண்பாட்டு இழை

 கலாசாரம் - ஆச்சாரம் என்ற வார்த்தைக்கு ஒழுங்கமைவு,  ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம். சந்திரகலையைப் போல வளர்ந்தும் தேய்ந்தும் ஒரு நிலையை அடைவதால் இதனை கலாசாரம் என்றனரோ☺️☺️ 


பண்பாடு - அந்தாளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே என்று கிராமத்தில் பெண்கள் கூறுவார்கள். அதில்.வெறுப்பு இருக்காது ஆதங்கம் இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன். இங்கு பாடு என்பது அன்றாட வாழ்க்கை என்றாகிறது. பண்பட்ட ஒரு வாழ்க்கை; பண் என்றால் இசை எனலாம், இசை வளர்ந்து செம்மைத் தன்மையினை இன்று அடைந்துள்ளது போல செம்மைத் தன்மை பெற்ற வாழ்வியலை பண்பாடு எனலாம்தானே?


இப்படி பண்பட்ட கலாசாரம்.தொன்மை வாயந்ததாக ஒன்று இந்தப் புவியில் இருக்கும் எனில் அது இந்த பாரத மண்ணில் இருக்கும் கலாசாரம்தான். 


திருக்குறள் இரண்டாயிரம்.ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். இன்று.உலகினில் இருக்கும் இரு பெரும் மதங்கள் அன்று உருவாகவில்லை. திருக்குறளுக்கு முந்தியது சங்கப்பாடல்களும் அதற்கும் பழமையதாய் தொல்காப்பியம். தொல்காப்பியம் நமக்குக் கிடைக்காத அகத்தியம் குறித்தும் பேசுகிறது. 


இதோ இரும்புப் பயன்பாடு திராவிட(திராவிட தென்னிந்திய நிலப்பரப்பினைக் குறிக்கும் சொல்) நிலத்தில் 5000 வருடங்களுக்கு முந்தியே இருந்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் வெளிவந்து இருக்கிறது. அறிவின் வளர்ச்சி என்பது ஒன்று இல்லாமல் இந்நிலையை எட்டி  இருக்க இயலாது. 


இலக்கியமோ வாழ்வியலோ அறிவியலோ கல்லணை சுட்டும் நீர் மேலாண்மையோ அது எதுவாகினும் இந்த மண்ணில் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு உச்ச நிலையை எட்டி இருக்கிறது என்றால் அதன் துவக்கம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்?


இனியாவது ஆங்கிலேயன் வந்துதான் நம்மைப் படிக்க வைத்தான். நமக்கெல்லாம் அறிவுக்கண்ணைத் திறந்தான் என்ற ஒரு அடிமை மனப்பான்மையைப் புறந்தள்ள நமக்கு மனம் வருமா? 


இந்தப் பண்பாடு கலாசாரம் இதனை அப்படியே பிரதிபலிக்கும் அழகிய வார்த்தைகளைக் கொண்டது தமிழ் மொழி. உண்மையில் இன்று வழக்கில் இருக்கும் சமஸ்கிருதம் அன்று வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. அது அறிவுசார் பதிவுகளை இந்தத் தேசத்துக்காக பதிந்து வைக்கும் ஒரு.பொது மொழி என்ற தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தமது படைப்புகளை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்திருக்கக் கூடும். பிராகிருதம்தான் அதிகம் புழக்கத்தில் இருந்த மொழியாக இருக்க வேண்டும். நிறக. 


சங்ககாலத் தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக வாசனை புழக்கத்தில் வந்துவிட்டது. இன்று நாற்றம்.துர்நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முடவன் என்ற சொல் இன்று மாற்றுத் திறனாளி என மாறி நிற்கிறது. மொழியின் அழகு தேய்ந்து வருகிறது. 


சமீபத்தில் கூட கந்தசஷ்டி கவசத்தில் வரும் சேரிள முலைமார் இதில் முலை என்ற சொல் ஆபாசமாக இருப்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். உணமைதான் மக்கள் மனதில் இது ஆபாசம் என்பதாகப் பதிந்துவிட்டது. அதனை ஆங்கிலத்தில் ப்ரெஸ்ட் என்று சொல்வதுதான் சரி என்ற நிலைக்குத் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.


 இன்று பல வார்த்தைகளுக்குத் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்யும் பொழுது நமது மொழியினை அதன் வளத்தை அதன் பெருமைக்கு மாசு கற்பிக்கிறோமே என்ற குற்ற உணர்வு எவரிடமும்.தோன்றுவதாகத் தெரியவில்லை. மாறாகப் பெருமை கொள்ளும் நிலை உருவாகி நிற்கிறது. 


தொல்காப்பியம் சங்கப் பாடல்கள் என்று பேசுகிறோமே எத்துணை பேருக்கு இவை முழுமையாகக் கற்பிக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலும்.ஒவ்வொருவுரும் முழுமையாக அறிந்திருக்க வேண்டியவை இவை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. நானும் அறிந்திலன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தயக்கமில்லை. வருத்தம் இருக்கிறது. 


நாம் நமது தாய்மொழி அதன் இலக்கிய வளப் பெருமையைப புறந்தள்ளி நல்ல தமிழ் வார்த்தைகளை பிறமொழி வார்த்தைகளில் இட்டு நிரப்புவோமானால் அங்கு நமது பெருமை கொண்ட பண்பாடு கலாசாரத்தின் பல்லாயிரக் கணக்கான ஆண்டாக கண்ணுக்குத் தெரியாமல் கட்டிக் காக்கின்ற நூலின் இழையும் அறுந்து.போகும். சிறிது சிறிதாக அறுந்து போக ஒரு நாள் மொத்த இழையும் அறுந்து.அடையாளம் அற்றவர்களாக நாம்.ஆகிப் போவோம். 


என்னதான் செய்ய வேண்டும். நமது மொழிவளத்தை நன்கு பயன்படுத்த வேண்டும். நாமும் நமக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நமது சந்ததிக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். பக்தி இலக்கியங்களோடு பழக.வேண்டும். 


நமது பண்பாட்டின் மீது பலமுனைத் தாக்குதல்கள் மேற்கத்திய சிந்தனைகள் வாயிலாக நிகழ்கிறது. அவை அவற்றைப் பெருமையாகவும் நம்மிடம் அது போன்ற எதுவுமில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. குறள் காட்டும் ஒழுக்கங்களை இந்த.காலத்திற்கு ஏற்றதல்ல என்று எள்ளி நகையாடி ஒதுக்க வைக்கின்றன. 


நம்மையும் நமது குழந்தைகளையும் குடும்பத்தினையும் தவறான வழியில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. அதற்கு நாம் செய்ய வேண்டியது நமது பண்பாட்டை உண்மை வரலாற்றை அறிய முற்படுவதும் நமது சந்ததிக்கு அறிமுகப் படுத்துவதுமே.